லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வரம் வழங்கும் வள்ளல்

பழனி அடிவாரத்தில் அருள்மிகு குழந்தைவேலாயுத சுவாமி, பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றும் கருணைமிகு வள்ளலாக எழுந்தருளுகிறார்

Published On :5 டிசம்பர் 2025, 5:46 pm IST

அருணகிரிநாதரால் பாடல்பெற்ற பெருமைமிக்கது திருஆவினன்குடி. பழனி மலை அடிவாரத்தில் உள்ள இந்தக் கோயிலே இப்புராதன தலத்தின் ஆதிகோயிலாகும். இத்தலத்தை நக்கீரர் தனது திருமுருகாற்றுப்படையில் முருகனின் மூன்றாம் படை வீடாகப் போற்றியுள்ளார்.

திருமகளும், காமதேனுவும், ஆதவனும், நிலமகளும், அக்கினிக் கடவுளும் இத்தலத்துக்கு வந்து இங்கே எழுந்தருளியுள்ள திருமுருகனை வழிபட்டதால், "திருஆவினன்குடி' என்னும் தெய்வீகத் திருப்பெயர் ஏற்பட்டதாகவும், இத்திருப்பெயர் சொன்ன அளவிலேயே முக்திப்பேறு நல்கும் மேலான சிறப்பை உடையது எனவும் பழனி தலபுராணம் கூறுகிறது. திருஆவினன்குடி திருமுருகனை தேவர்களும் முனிவர்களும் வழிபட்டு தங்களின் குறைதீர்த்துக் கொண்டனர்.

மேற்கு நோக்கி அமைந்துள்ள கோயிலில் முருகன் மயில் மீது அமர்ந்து குழந்தை வேலாயுத சுவாமி என்ற பெயருடன் தம்மைச் சிந்தித்துப் போற்றி வணங்கி வழிபடுவோருக்கு வேண்டும் வரம் வழங்கும் வள்ளலாக எழுந்தருளியுள்ளார். இம்மை நலத்தையும், மறுமை நலத்தையும், வீடுபேற்றினையும் வழங்கிக் காத்தருளும் கருணைக் கடலாக, கண்கண்ட தெய்வமாகத் திகழ்கின்றார். இதனை அருள்ஞானப் பரம்பரையில் தோன்றிய நக்கீரர், அருணகிரியார், வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் போன்ற அருளாளர்களின் அருள்வாக்கால் அறிகிறோம்.

கோயிலின் வடகிழக்குப் பகுதியில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. பழனி முருகனை வழிபட வரும் பக்தர்கள் திருஆவினன்குடி முருகனை வழிபட்ட பிறகு மலைக்குச் செல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இங்கு பங்குனி உத்திரத் திருவிழா திருத்தேரோட்டத்துடன் விமர்சையாக நடைபெறுகிறது.

அண்மையில் அருள்மிகு குழந்தைவேலாயுத சுவாமி சந்நிதி மற்றும் திருச்சுற்று தெய்வங்களின் சந்நிதிகள் அழகுறத் திருப்பணி செய்யப்பட்டு பொலிவு பெற்றுள்ளது. இக்கோயிலில் டிசம்பர் 8}ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.