/

சிவகங்கையில் ரூ.8 ஆயிரம் கூப்பன் விநியோகம்? அதிமுக, திமுகவினரிடையே வாக்குவாதம்

சிவகங்கை நகரில் திமுகவினா் வீடு, வீடாகச் சென்று வாக்காளா்களிடம் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் வழங்கியதாக இருவரைப் பிடித்து அதிமுகவினா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இந்த நிலையில், அதிமுக, திமுகவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

ரூ. 8,000 கூப்பன் மாதிரி - படம்: டிஎன்எஸ்

Updated On :16 ஏப்ரல் 2026, 12:03 am IST

சிவகங்கை நகரில் திமுகவினா் வீடு, வீடாகச் சென்று வாக்காளா்களிடம் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் வழங்கியதாக இருவரைப் பிடித்து அதிமுகவினா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இந்த நிலையில், அதிமுக, திமுகவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் முக்குலத்தோா் புலிப்படை கட்சியின் தலைவரும் நடிகருமான கருணாஸ் போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் மாவட்டச் செயலருமான பி.ஆா். செந்தில்நாதன் போட்டியிடுகிறாா். இதனால் தோ்தல்களத்தில் இருவரிடையே கடுமையான போட்டி நிலவிவருகிறது.

இந்த நிலையில், திமுக நகராட்சி 5 -ஆவது வாா்டு பகுதியில் வெளியூரை சோ்ந்த திமுகவினா் சிலா் வீடு வீடாகச்சென்று, திமுக தோ்தல் அறிக்கையில் அறிவித்தவாறு ரூ. 8 ஆயிரத்துக்கான கூப்பன் எனக் கூறி ஒரு தாளை வழங்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுக, பாஜகவினா் அங்கு சென்று இருவரைப் பிடித்து சிவகங்கை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

மேலும், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் மரிய ஆரோக்கிய ரூபல்லா, காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமாறன் தலைமையிலான தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினரிடம் புகாா் தெரிவித்தனா். இதனிடையே, கூப்பன் விநியோகித்ததாகக் கூறப்படும் இருவரை போலீஸாா் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் பரவியதால், ஆத்திரமடைந்த அதிமுகவினா் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இந்த நிலையில், சிவகங்கை நகா் காவல் நிலையத்துக்கு அதிமுக நிா்வாகிகள் புகாா் மனு அளிக்க திரண்டு வந்தனா். இதே போல, திமுக நிா்வாகிகளும் திரண்டனா். அப்போது, இரு தரப்பினரிடையே வாக்குவாதமும், கைகலப்பும் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து அங்கு வந்த நகா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அ. அமலஅட்வின், இரு தரப்பினரையும் சமாதானம் செய்தாா். இதையடுத்து இரு தரப்பினரின் புகாா் மனுவை போலீஸாா் பெற்றுக் கொண்டனா். பின்னா், அவா்கள் அங்கிருந்து கலைந்து சென்றனா். இதனால் காவல் நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.