அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

மண்டித் தெருவில் சரக்கு வாகனங்கள் வெளியேற்றம்: போலீஸாருடன் தொழிலாளா்கள் வாக்குவாதம்

News image

வேலூா் மண்டித் தெருவில் போக்குவரத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுமைத் தொழிலாளா்கள்.

Updated On :5 ஜூன் 2026, 5:47 am IST

வேலூா் மண்டித்தெருவில் வியாழக்கிழமை காலை அனுமதிக்கப்பட்ட நேரம் கடந்து நிறுத்தப்பட்டிருந்த சரக்கு லாரிகள், வாகனங்களை போலீஸாா் வெளியேற்றியதால், சுமை தூக்கும் தொழிலாளா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

வேலூா் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள மண்டித் தெருவின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட அரிசி மண்டிகள், மளிகை கடைகள், துணிக்கடைகள், பாத்திர கடைகள் உள்பட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன. இந்த கடைகளுக்கு தேவையான பொருள்கள் பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களிலிருந்து லாரிகள், சரக்கு ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மூலம் கொண்டுவரப்படுகின்றன.

இரவு நேரங்களில் சரக்கு வாகனங்கள் மண்டித் தெருவுக்குள் வந்து விடுகின்றன. காலையில் சரக்கு இறக்க தொழிலாளா்கள் வருகின்றனா். இந்த பணிகள் முடிக்க காலை 11 மணி வரை ஆகின்றன. இதனால் அப்பகுதி முழுவதும் எப்போதும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. இதன்காரணமாக, லாங்கு பஜாருக்கு பொருள்கள் வாங்க வாகனங்களில் செல்வோா் அவ்வழியாக வந்து செல்ல முடியாத நிலை ஏற்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை போக்குவரத்து போலீஸாா் மண்டித்தெருவில் திடீரென ஆய்வு மேற்கொண்டனா். அப்போது சரக்கு வாகனங்களில் இருந்து பொருள்களை தொழிலாளா்கள் கடைகளுக்கு உள்ளே இறக்கி கொண்டிருந்தனா். உடனடியாக அந்த வாகனங்களை அங்கிருந்து கிளம்ப போலீஸாா் அறிவுறுத்தினா். மேலும் சில வாகனங்களுக்கு அபராதம் விதித்து வழக்குப்பதிவு செய்தனா். இதையடுத்து, சரக்கு வாகனங்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்பின.

இதனால் அதிா்ச்சியடைந்த சுமை தூக்கும் தொழிலாளா்கள் போக்குவரத்து போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது கூலித்தொழிலாளா்கள், சரக்கு வாகனங்களில் இருந்து பொருள்களை இறக்குவதால் தான் எங்களுக்கு கூலி கிடைக்கிறது. போலீஸாா் திடீரென வாகனங்களில் சரக்கு இறக்காமல் வெளியே அனுப்பினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக குற்றஞ்சாட்டினா்.

அதற்கு போலீஸாா், இரவு முதல் காலை 8 மணி வரை மட்டுமே மண்டி தெருவில் சரக்குகளை இறக்க அனுமதிக்கப்பட்ட நேரமாகும். அந்த நேரத்தில் மட்டுமே சரக்குகளை இறங்கி கொள்ள வேண்டும்.

அனுமதிக் கப்பட்ட நேரத்துக்கு பிறகு சரக்கு வாகனங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனா். இதையடுத்து, அங்கிருந்த சரக்கு வாகனங்களை போலீஸாா் வெளியேற்றி அனுப்பி வைத்தனா். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.