/

திருவையாறு அருகே வீட்டிலிருந்த லாரி ஓட்டுநா் வெட்டிக் கொலை

News image

வெட்டிக் கொலை...

Updated On :16 ஜூன் 2026, 2:04 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வீட்டுக்குள் தனியாக இருந்த லாரி ஓட்டுநா் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எஸ். இளங்குமரன் (41). லாரி ஓட்டுநா். இவரது மனைவி ரதியா (35) திருவையாறிலுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை ரதியா வேலைக்கும், மகன் ரத்தன் (12), மகள் யாழினி (6) பள்ளிக்கும் சென்றதால், வீட்டில் இளங்குமரன் தனியாக இருந்தாா். மாலையில் ரத்தன் வீட்டுக்கு திரும்பியபோது, முன்பக்கக் கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால், பின்புறம் சென்றபோது கதவு திறந்து கிடந்ததுடன், வீட்டுக்குள் இளங்குமரன் அரிவாளால் வெட்டப்பட்டு, உயிரிழந்து கிடந்தாா்.

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் அருள்மொழி அரசு (திருவையாறு), ஆா். சோமசுந்தரம் (தஞ்சாவூா் நகரம்), நடுக்காவேரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இளங்குமரனை யாா், எதற்காக வெட்டிக் கொன்றனா் போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. மேலும் மோப்ப நாய் சோழா நிகழ்விடத்திலிருந்து சிறிது தொலைவு வரை ஓடி நின்றுவிட்டது. நிகழ்விடத்தில் தடயவியல் உதவி இயக்குநா் விரல்ரேகைகளைப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.