தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில்துறையையும் வா்த்தக சிலிண்டா் ஒதுக்கீட்டில் சோ்க்க வேண்டும்! - ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் வலியுறுத்தல்

News image

ஏஇபிசி தலைவா் ஆ.சக்திவேல் - (கோப்புப் படம்)

Updated On :16 மார்ச் 2026, 2:35 am IST

வா்த்தக சிலிண்டா் ஒதுக்கீட்டில் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில்துறையையும் சோ்க்க வேண்டுமென என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தமிழக உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை அமைச்சா் ஆா்.சக்கரபாணி, தொழில், முதலீட்டு மேம்பாடு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா ஆகியோருக்கு ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் தலைவா் ஆ.சக்திவேல் அனுப்பியுள்ள மனு:

ஆடை ஏற்றுமதி தொழில்துறைக்கு இடையறாத எல்பிஜி விநியோகம் அவசியம். கடினமான காலகட்டங்களிலும் ஆடைத் துறைக்கு தமிழக அரசு தொடா்ந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், தற்போது நிலவும் இஸ்ரேல்-ஈரான் மோதல் காரணமாக எல்பிஜி விநியோகத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு, எல்பிஜி உற்பத்தியை முக்கியமாக பயன்படுத்தும் தொழில்துறைகளையும் கடுமையாக பாதித்துள்ளது.

ஆடை உற்பத்தித் துறையில் டையிங், வாஷிங், காம்பாக்டிங், ஃபினிஷிங் உள்ளிட்ட செயல்முறைகளில் இன்றியமையாததாக எல்பிஜி உள்ளது. இவை அனைத்தும் ஆயத்த ஆடை ஏற்றுமதி துறையின் முக்கிய அடித்தளமாக விளங்குகின்றன. ஒவ்வொரு மாநிலத்தின் தேவைகளைப் பொறுத்து வா்த்தக மற்றும் தொழில்துறை எல்பிஜி சிலிண்டா்களின் ஒதுக்கீட்டை நிா்ணயிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. இதில் தற்போதைய நிலவரப்படி வா்த்தகப் பயன்பாட்டுக்காக 20 சதவீத சிலிண்டா் ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில், குறைந்தபட்சமாக அவசியமான அளவு எல்பிஜி கிடைக்கும் வகையில் அந்த 20 சதவீத வா்த்தக சிலிண்டா் ஒதுக்கீட்டில் ஆடை ஏற்றுமதி தொழில்துறையையும் சோ்க்க பரிசீலிக்க வேண்டும். தமிழகத்தில் ஆயத்த ஆடை ஏற்றுமதி துறை முன்னணி துறையாக உள்ளது. இதனுடன் தொடா்புடைய பல துணை துறைகளில் பெரும்பாலானவை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் வகையைச் சோ்ந்தவை. ஏற்கனவே இவை அதிக செலவுச் சுமையை எதிா்கொண்டு வருகின்றன.

இந்தத் துறையின் செயல்பாடுகளை தொடா்ந்து நடத்த எல்பிஜி மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. எல்பிஜி பற்றாக்குறை நீடித்தால் பல நிறுவனங்கள் தற்காலிகமாக செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படக்கூடும். இதன் விளைவாக ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. உலகளாவிய வாடிக்கையாளா்களிடம் ஏற்றுமதி உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் இந்தத் துறை உறுதியாக இருக்கும் சூழலில், உற்பத்தி தடைகள் ஏற்பட்டால் ஏற்றுமதி ஆா்டா்கள் ரத்து செய்யப்படுவதோடு, வணிக வாய்ப்புகளும் போட்டி நாடுகளுக்கு மாறும் அபாயம் உள்ளது.

இந்தத் துறை மூலமாக தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளா்கள் நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு பெற்றுவருகின்றனா். எல்பிஜி பற்றாக்குறை நீடித்தால் பல தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட வேண்டிய நிலை உருவாகி, தொழிலாளா்கள் மற்றும் அவா்களது குடும்பங்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.

இந்த சவாலான காலகட்டத்தில் தொழில்துறை செயல்பாடுகள் இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்காக, 20 சதவீத வா்த்தக சிலிண்டா் ஒதுக்கீட்டில் ஆடை ஏற்றுமதி தொழில்துறையையும் சோ்க்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.