/

சமீர் ரிஸ்வி மீண்டும் அதிரடி; தில்லி கேபிடல்ஸுக்கு 2-வது வெற்றி!

ஐபிஎல் தொடரில் சமீர் ரிஸ்வியின் அதிரடியான ஆட்டத்தால் தில்லி கேபிடல்ஸ் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

News image

தில்லி கேபிடல்ஸ் வீரர் சமீர் ரிஸ்வி - படம் | ஐபிஎல் (எக்ஸ்)

Updated On :4 ஏப்ரல் 2026, 7:31 pm IST

ஐபிஎல் தொடரில் சமீர் ரிஸ்வியின் அதிரடியான ஆட்டத்தால் தில்லி கேபிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் தில்லி கேபிடல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாடின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தில்லி கேபிடல்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் விளையாடியது.

சூர்யகுமார் யாதவ் அரைசதம்; தில்லி கேபிடல்ஸுக்கு 163 ரன்கள் இலக்கு!

முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 162 ரன்கள் எடுத்தது.

முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கல்டான் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, திலக் வர்மா 0 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அணியில் அதிகபட்சமாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ரோஹித் சர்மா 35 ரன்களும், நமன் திர் 28 ரன்களும் எடுத்தனர். மிட்செல் சாண்ட்னர் 18 ரன்கள் எடுத்தார்.

தில்லி கேபிடல்ஸ் தரப்பில் முகேஷ் குமார் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். லுங்கி இங்கிடி, அக்‌ஷர் படேல், விப்ராஜ் நிகம் மற்றும் நடராஜன் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

சமீர் ரிஸ்வி அதிரடி; தில்லிக்கு 2-வது வெற்றி!

163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தில்லி கேபிடல்ஸ் அணி களமிறங்கியது.

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் பதும் நிசங்கா களமிறங்கினர். முதல் போட்டியில் 0 ரன்னில் ஆட்டமிழந்த கே.எல்.ராகுல் இன்றையப் போட்டியில் ஒரு ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து, நிதீஷ் ராணா 0 ரன்னில் ரன் அவுட் ஆனார். தில்லி கேபிடல்ஸ் 7 ரன்களுக்கே இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன் பின், பதும் நிசங்கா மற்றும் சமீர் ரிஸ்வி ஜோடி சேர்ந்தனர். இந்த இணை சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது. பதும் நிசங்கா நிதானமாக விளையாட சமீர் ரிஸ்வி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதிரடியாக விளையாடிய அவர் அரைசதம் கடந்து அசத்தினார். பதும் நிசங்கா 30 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும்.

இதனையடுத்து, சமீர் ரிஸ்வி மற்றும் டேவிட் மில்லர் ஜோடி சேர்ந்தனர். டேவிட் மில்லர் நிதானமாக விளையாட சமீர் ரிஸ்வி சிக்ஸர் மழை பொழிந்தார். அதிரடியாக விளையாடிய அவர் 10 ரன்களில் சதம் விளாசும் வாய்ப்பை தவறவிட்டார். அவர் 51 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் அடங்கும்.

இறுதியில் 18.1 ஓவர்கள் முடிவில் இலக்கை எட்டி தில்லி கேபிடல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டேவிட் மில்லர் 21 ரன்களுடனும், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் தீபக் சஹார், மிட்செல் சாண்ட்னர் மற்றும் கார்பின் பாஷ் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான இந்த வெற்றியின் மூலம், தில்லி கேபிடல்ஸ் அணி அதன் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது. மேலும், புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கும் முன்னேறியுள்ளது.

அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு உதவிய சமீர் ரிஸ்விக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

லக்னௌ அணிக்கு எதிரான முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய சமீர் ரிஸ்வி, 70* ரன்கள் எடுத்து தில்லி கேபிடல்ஸின் வெற்றிக்கு உதவியது குறிப்பிடத்தக்கது.

Summary

Thanks to Sameer Rizvi's explosive performance in the IPL, the Delhi Capitals defeated the Mumbai Indians by 6 wickets.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.