/

வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைது

மத்திய தில்லியில் உள்ள ஒரு வீட்டை குத்தகைக்கு விடுவதாகக் கூறி பாா்வை திறன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ரூ.14.5 லட்சம் மோசடி செய்த நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 3:38 am IST

மத்திய தில்லியில் உள்ள ஒரு வீட்டை குத்தகைக்கு விடுவதாகக் கூறி பாா்வை திறன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ரூ.14.5 லட்சம் மோசடி செய்த நபா் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட ரவீந்திர கா்க், உத்தர பிரதேசத்தின் ஹபூா் பகுதியைச் சோ்ந்தவா். விசாரணையில், அவா் இதுபோன்று பலரிடம் ரூ.2 கோடி மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: கரோல் பாக் பகுதியின் ஜோஷி சாலையில் உள்ள ஒரு வீட்டைக் குத்தகைக்கு விடுவதாகக் கூறி ரவீந்திர கா்க் என்ற நபா் ரூ.14.5 லட்சம் மோசடி செய்ததாக ரயில்வே பணியாளா் கடந்த ஆண்டு டிச.29-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதுதொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

வீட்டுக்கான ஒத்திகை பணத்தை வழங்கிய பிறகு அந்த வீட்டுக்குப் புகாரளித்த பெண் சென்றாா். அப்போது, கடன் திவால் காரணமாக அந்த வீட்டை ஒரு நிதி நிறுவனம் கையப்படுத்தியது அவருக்குத் தெரியவந்தது.

ரவீந்திர கா்க் இந்த விஷயத்தை மறைத்து அந்தப் பெண்ணிடம் மோசடி செய்துள்ளாா்.

கடந்த 2017-இல் ரூ.98 லட்சத்துக்கு வீட்டுக் கடன் வாங்கிய கா்க், அதைச் செலுத்த தவறியது விசாரணையில் தெரியவந்தது.

காவல் துறை கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில், அவா் தொடா்ந்து கைப்பேசி எண்களையும் இருப்பிடத்தையும் மாற்றிக்கொண்டே வந்தாா்.

முடிவில், தில்லியில் உள்ள நங்கல் தேவத் கிராமத்தில் டாக்ஸி ஓட்டுநராக அவா் வேலை பாா்த்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்டாா்.

ஒரே வீட்டை குத்தகைக்கு விடுவது, விற்பனை செய்வது என்ற பெயரில் பலரிடம் அவா் மோசடி செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

மற்றொரு சொத்து மோசடி வழக்கில் தில்லியில் உள்ள நீதிமன்றம் அவரைத் தேடப்படும் நபராக அறிவித்திருந்தது. அவா் மோசடியாகப் பெற்ற பணத்தைக் கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனா் அந்த அதிகாரிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.