/

ஆண்களின் உலகம்: பாக்யராஜின் மௌன கீதங்கள்... சென்சாரில் 4 பெண்கள்!

இயக்குநர் கே. பாக்யராஜ் இயக்கிய மௌன கீதங்கள் திரைப்படம் குறித்து...

News image

மௌன கீதங்கள் போஸ்டர், இயக்குநர் கே. பாக்யராஜ். - படங்கள்: சன் நெக்ஸ்ட், இஎன்எஸ்.

Updated On :5 மணி நேரங்கள் முன்பு

திரைக்கதை மன்னன் என்றழைக்கப்படும் இயக்குநர் கே. பாக்யராஜ் தனது 73ஆவது வயதில் சென்னையில் காலமானார் என்ற செய்தி திரைத்துறையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆண் - பெண் உறவு குறித்து அவர் இயக்கிய படங்கள் மிகவும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இதில், மௌன கீதங்கள் என்ற திரைப்படம் மிகுதியான வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தப் படத்தில் ஆண்களின் உலகை மிகவும் இயல்பாகவே காட்சிப்படுத்தி இருப்பார்.

ஜெயகாந்தனனின் உண்மை சுடும் என்ற சிறுகதையும் தனது வாழ்க்கையின் சொந்த அனுபவங்களின் அடிப்படையிலும் இந்தப் படத்தை, கே. பாக்யராஜ் எழுதி இயக்கியிருப்பார்.

இந்தக் கதையை படத்துக்கு முன்பே வார இதழில் சீரியலாக வெளியிட்டுள்ளார். படம் வெளியாகி 25 வாரங்கள் ஓடியது. பின்னர், பல மொழிகளில் ரீமெக் செய்யப்பட்டது. அப்படி என்ன இருக்கிறது இந்தப் படத்தில்?

கணவன் மனைவிக்கு இடையேயான உறவு என்பதை விட ஓர் ஆண், ஒரு பெண்ணுக்கு இடையேயான அந்தரங்கங்களை ஒளிவுமறைவின்றி எடுத்திருப்பார். குறிப்பாக ஆண்களின் உலகத்தை வெள்ளித் திரையில் போட்டு உடைத்திருப்பார். இதுதான் அந்தப் படத்தை 25 வாரங்கள் ஓடுமளவுக்குச் செய்ததோ என்னவோ?

இந்தப் படத்துக்கு கங்கை அமரன் இசையமைத்திருப்பார். ’மூக்குத்தி பூ மேல்...’ என்ற பாடல் இன்று கேட்டாலும் அதன் பரவசத்துக்கு குறைவே இருக்காது. மாயாமாளவகௌளை என்ற ராகத்தில் உருவாக்கப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

பாக்யராஜ் ரகு என்ற கதாபாத்திரத்திலும் சரிதா சுகன்யா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார்கள். சுகன்யாவின் தோழியிடம் ஏற்பட்ட உறவினால் இருவரும் பிரிகிறார்கள். பின்னர், 5 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து எப்படி சேருகிறார்கள் என்பது கதையாக இருக்கிறது. இதில் பாக்யராஜ் எப்படி தனது மேதமையைப் புகுத்துகிறார் தெரியுமா?

ஊரிலிருந்து வரும் பாக்யராஜ் மனைவி சரிதாவை திரையரங்கம், ஓட்டல், ஷாப்பிங் என காலையில் கூட்டிச் செல்கிறார். பின்னர், மாலையில் வந்ததும் மனைவி தனக்கு மாதவிடாய் என்றதும் கோபத்துடன் மனைவியை, “இதைக் காலையிலேயே சொல்லி இருக்கலாமே” என்பார். அதற்கு மனைவி, “ஓ, அப்போது இதெல்லாம் அதற்காகத்தானா?” என்று கேள்வி கேட்க சிரிப்பு வந்தாலும், ஆண் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடையாமல் இருக்க முடியாது.

மற்றுமொரு காட்சியில் மனைவி குளித்து முடித்துவிட்டு ஆடை அணிந்து வருகிறார். அப்போது, ஜாக்கெட்டின் ஊக்கு மாட்ட கஷ்டப்படுவதால் கணவனிடம் கேட்கிறாள். அப்போது பிஸ்யாக வேலைக்குத் தயாராகிவரும் கணவன் “இப்போ இதுதான் முக்கியமா?” எனக் கேட்க, மனைவி, “இரவில் ஊக்கை கழட்ட மட்டும் வேகம் காட்டுவது ஏன்” என்ற கேள்வியை எழுப்புவாள். இதற்கும் பார்வையாளர்கள் சிரிப்புடன் கூடிய அதிர்ச்சியை அடைவார்கள்.

காமத்திற்காக எதை வேண்டுமாலும் செய்ய துணிவதும், பிறகு அதற்காக வருத்தப்படுவதும்தான் பொதுவான ஆண்களின் உலகமாக இருந்துவருகிறது. மாறாக, பெண்கள் அன்புக்காக ஏங்குவார்கள் என்பதும், அவர்களுக்கும் ஆணைப்போல ஆசைகள் இருக்கும் என்பதை ஓரிரு காட்சிகளில் போட்டு உடைத்துவிட்டார் பாக்யராஜ். இதுதான் அவரது ஒட்டுமொத்த படைப்புலகின் அச்சாணியாகவே இருந்தது எனலாம்.

இந்தப் படத்திற்காக சென்சாரில் ஒரு ஆணும் நான்கு பெண்களும் இருந்த கதையை சமீபத்தில் பாக்யராஜ் மற்றொரு படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கூறியிருப்பார். பெண்கள் அதிகளவு தனது படத்தின் சென்சாரில் தலையிட்டதாகக் கூறியுள்ளார்.

கணவன் மனைவி எப்படி அந்தரங்கமாகப் பேசுவார்களோ அதைத்தான் வைத்திருக்கிறேன். வேண்டுமானால் ஏ சான்றிதழ் அளித்துக்கொள்ளுங்கள் காட்சியை எடுக்கக் கூடாது என வாதிட்டதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் ஆண்களின் உலகத்தை அப்பட்டமாகக் காட்டியவர்களில் பாக்யராஜ் அளவுக்கு யாருமில்லை எனலாம். சுவாரசியமான காட்சிகளால் திரைக்கதை மன்னன் என புகழ்ப்பட்டவர்! அவர் மறைந்தாலும் அவரது படைப்புகள் மறையாமல் தமிழ் சினிமா என்ற சிறப்புடன் உயிர்ப்புடன் இருக்கும்!! அவரது ஆன்மா சாந்தியடையட்டும்!!!

Summary

A Man's World: Bhagyaraj's Mouna Geethangal... Four Women at the Censor Board!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.