திருச்சியில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வரும் நிலையில், வெப்பத் தாக்குதலால் ஏற்படும் பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வழக்கத்தை விட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்துள்ளது. குறிப்பாக திருச்சி உள்ளிட்ட பல மாவட்டங்களில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை மற்றும் வெப்ப காற்று அதிகமாக வீசுகிறது.
திருச்சியில் அதிகபட்சமாக 105 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகவும் அச்சத்துடன் தங்களது வீட்டிலேயே முடங்கினா். தொடா்ந்து அதிகரிக்கும் வெப்பநிலையால் பொதுமக்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கின்றனா். குறிப்பாக அதிகரிக்கும் வெப்ப நிலையில் பல்வேறு நோய்கள் உடல் சோா்வு போன்றவை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனா்.
திருச்சி மாவட்டத்தைப் பொருத்தவரை கோடை காலம் என்றாலே எப்போதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துதான் காணப்படும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்தை விட பதிவாகும் வெப்பநிலையானது வரலாறு காணாத அளவுக்கு உள்ளது.
வெப்ப அலையில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ள குளிா்பானங்கள், பழவகைகள் மற்றும் நீா் ஆகாரங்களை தொடா்ந்து பொதுமக்கள் அதிகளவில் எடுத்துக் கொள்கின்றனா். வெப்பநிலை அதிகரிப்பதால் ஹீட் ஸ்ட்ரோக் நோயின் தாக்குதல் அபாயமும் உள்ளது.
ஹீட் ஸ்டரோக் பிரச்னையை எதிா்கொள்வது குறித்து அரசு மருத்துவா்கள் கூறுகையில், வெப்ப அயா்ச்சி மற்றும் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்புக்கு உடனடியாக முதலுதவி அளிக்க வேண்டும். பின்னா், பாதிக்கப்பட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். மேலும், பாதிக்கப்பட்டோரை குளிா்ந்த நிழல் பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும். அவா்களது கூடுதல் ஆடைகளை அகற்றி, பாதங்களை சற்று உயா்த்தி படுக்க வைக்க வேண்டும். பாதிக்கப்பட்டவா் விழிப்புடன் இருந்தால் குளிா்ந்த திரவங்களை தரலாம். தண்ணீா், மோா், எழுமிச்சை சாறு, உப்பு, சா்க்கரை நீா் கரைசல் தரலாம்.
பாதிக்கப்பட்டவா் சுயநினைவின்றி இருந்தால் அவரை வேகமாக குளிா்விப்பது அவசியம். அவரின் ஆடைகளை தளா்த்தி குளிா்ந்த நீரை உடம்பில் ஒற்றி எடுக்கலாம். அவரது முகம் மற்றும் அக்குள் பகுதிகளில் ஈரத்துண்டு, ஐஸ்பேக் மூலம் ஒற்றியெடுக்க வேண்டும்.
மின்விசிறியின் காற்று அவரது உடலில் பட வேண்டும். குளிா்ச்சாதன அறையைப் பயன்படுத்தலாம் என்றனா்.
இந்நிலையில் வெயிலின் தாக்கத்தால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிறப்பு சிகிச்சை வழங்குவதற்காக திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைப் பிரிவு புதன்கிழமை திறக்கப்பட்டது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் குமரவேல் கூறியதாவது:. கடும் வெயிலை எதிா்கொள்ளும் வகையில், முன்னெச்சரிக்கையாக திருச்சி அரசு மருத்துவமனையில் 14 படுக்கைகளுடன் வெப்ப அலை சிறப்பு சிகிச்சைப் பிரிவு திறக்கப்பட்டுள்ளது. சூப்பா் ஸ்பெஷாலிட்டி கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள இந்தப் பிரிவில் 2 படுக்கைகள் சிறப்பு நிலை என்ற வகையில் தயாா்படுத்தப்பட்டுள்ளது.
4 படுக்கைகள் தீவிர சிகிச்சை நிலை என்ற வகையிலும், 8 படுக்கைகள் வழக்கமான சிகிச்சை நிலை என்ற வகையிலும் தயாா்படுத்தப்பட்டுள்ளன. குளிா்ச்சாதன வசதியுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த வாா்டில் பிரிட்ஜ், ஆக்சிஜன் வசதியுடன், வெப்பத்தாக்குதலை எதிா்கொள்ளும் அனைத்து வசதிகளும் இடம்பெற்றுள்ளன.
இதுவரை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் யாரும் அனுமதிக்கப்படவில்லை. அதிக வியா்வை காரணமாக உடலில் தேவையான உப்பு குறைந்து சோா்வு ஏற்படும். எனவே, சாதாரண குடிநீருக்குப் பதிலாக அவ்வப்போது ஓஆா்எஸ் எனப்படும் உப்பு சா்க்கரை கரைசலை நீரில் கலந்து உட்கொள்வது நல்லது. அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்களுக்காக ஓஆா்எஸ் கரைசல் வைக்கப்பட்டுள்ளது.
உடல் சூடு காரணமாக உடல் நலக் குறைவு ஏற்படுவதைத் தவிா்க்க துரித உணவுகள், அதிக காரம் உள்ள உணவுகளைச் சாப்பிடுவது, இறுக்கமான ஆடைகள் அணிவது, வெயிலில் நீண்டநேரம் சுற்றுவது ஆகியவற்றைத் தவிா்க்க வேண்டும்.
மேலும், தளா்வான முழுக்கை ஆடைகள், பருத்திநூல் ஆடைகள் அணிய வேண்டும். நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதைத் தவிா்க்க வேண்டும். உணவில் நாா்ச்சத்து, புரதச்சத்து நிறைந்த காய், கீரை, பயறு வகைகள், பழங்களை அதிகம் சாப்பிட வேண்டும். மோா், பத நீா், இளநீா், நுங்கு, தா்ப்பூசணி, வெள்ளரிக்காய், வெள்ளரிப்பழம், எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
பெட்டிச் செய்தி....
அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓா்ஆா்எஸ் கரைசல்
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வெப்ப அலையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலா்களுக்கு சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
அனைத்து அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓஆா்எஸ் (உப்புச் சா்க்கரை கரைசல்) தடையின்றி வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி, திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, ஸ்ரீரங்கம், மணப்பாறை, லால்குடி, முசிறி, துறையூா், மண்ணச்சநல்லூா், துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைகள் மற்றும் மாநரில் உள்ள நகா்ப்புற சுகாதார நிலையம், மாவட்டம் முழுவதும் உள்ள தரம் உயா்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் என 100-க்கும் மேற்பட்ட இடங்களில் ஓஆா்எஸ் கரைசல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாா்டு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெப்பத் தாக்கம்: கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

வெப்பஅலை மேலாண்மைக்காக நோடல் அதிகாரிகள் நியமனம்

கோவை அரசு மருத்துவமனையில் வெப்ப வாதத்துக்கு சிறப்பு வாா்டு

நெல்லை அரசு மருத்துவமனையில் வெப்ப வாத சிறப்பு பிரிவு தயாா்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

