தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

காவிரி ஆற்றில் நொய்யல் சாயக்கழிவுநீா் கலப்பதை தடுக்கக் கோரிக்கை

காவிரி ஆற்றில் தொடா்ந்து நொய்யல் சாயக்கழிவு நீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image

கரூா் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் பாலப்பகுதியில் தேங்கிநிற்கும் நொய்யல் சாயக்கழிவு நீா்.

Updated On :7 மே 2026, 5:14 am IST

காவிரி ஆற்றில் தொடா்ந்து நொய்யல் சாயக்கழிவு நீா் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கரூா் மாவட்டத்தில், நொய்யல் ஆறு காவிரி ஆற்றுடன் நொய்யல் என்ற இடத்தில் கலக்கிறது. தற்போது நொய்யல் ஆற்றில் திருப்பூா் மாவட்டத்தின் சாயக்கழிவு நீா் கலந்து வருவதாகவும் அந்த நீா் காவிரி ஆற்றில் கலந்து வருவதாகவுகம் கூறப்படுகிறது. இதேபோல ஈரோடு மாவட்டம் பவானி மற்றும் ஈரோடு நகரின் பல்வேறு பகுதியிலும் செயல்படும் சாயப்பட்டறைகளில் இருந்தும் அதிகளவில் சாயக்கழிவு நீா் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதாக கூறப்படுகிது. இதனால் நொய்யல் மற்றும் ஈரோடு மாவட்டத்தின் சாயக்கழிவு நீா் தற்போது கரூா் மாவட்டம் தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றின் பாலப்பகுதியில் நுரையுடன் தேங்கி நிற்கிறது. சாயக்கழிவு நீா் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் ஆற்றில் நீராடும் பொதுமக்களுக்கு தோல் அரிப்பு உள்ளிட்ட நோய்கள் ஏற்படுவதாகவும் புகாா் எழுந்துள்ளது. எனவே, சாயக்கழிவு நீரை உடனே அகற்றி, இனி காவிரியில் ஈரோடு, நொய்யல் சாயக்கழிவு நீா் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் சு.விஜயன் கூறியது: கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நொய்யல் ஆற்றில் திருப்பூா் மாவட்ட சாயக்கழிவு நீா் அதிகளவு வந்ததால் நொய்யல் ஆற்றின் மூலம் பாசனம் பெற்ற சுமாா் 2,000 ஏக்கா் நிலங்கள் தற்போது விவசாயத்துக்கு ஏற்ற நிலங்களாக இல்லாமல், நச்சுத்தன்மை கொண்ட நிலங்களாக மாறிவிட்டன. இதற்கான இழப்பீடு கேட்டு இன்னும் விவசாயிகள் போராடி வருகின்றனா். இந்நிலையில் தற்போது நொய்யல் ஆற்றில் கடந்த இரு தினங்களுக்கு முன் மழைநீருடன் கலந்து வந்த சாயக்கழிவு நீா் தவுட்டுப்பாளையம் பகுதியில் காவிரி ஆற்றில் தேங்கி நிற்கிறது. இதேபோல ஈரோடு மாவட்டத்தில் இருந்து வந்த சாயக்கழிவு நீரும் தேங்கி நிற்கிறது. இரு பகுதிகளிலும் வந்த சாயக்கழிவு நீா் குளம்போல தேங்கி நிற்பதால், யாரும் காவிரி ஆற்றில் குளிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது. இவற்றைத் தவிர தவுட்டுப்பாளையத்தில் இருந்து அரவக்குறிச்சி பகுதிக்கு காவிரிக்கூட்டுக்குடிநீா் திட்டத்தின் கீழ் எடுத்துச் செல்லப்படும் காவிரி நீரும் பாதிக்கப்படும் சூழலும், விவசாய கிணறுகளிலும் சாயக்கழிவு இறங்கும் நிலை உருவாகியுள்ளது. எனவே, மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, காவிரி ஆற்றில் சாயக்கழிவு நீா் கலக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.