/

தெப்பக்குளம் பகுதியில் தரைக்கடைகள் அகற்றம்

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் இருந்த தரைக்கடைகளை காவல்துறை உதவியுடன் மாநகராட்சிப் பணியாளா்கள் சனிக்கிழமை அகற்றினா்.

News image

திருச்சி என்.எஸ்.பி.சாலையில் எஞ்சிய ஆக்கிரமிப்பு கடைகளை சனிக்கிழமை அகற்றிய மாநகராட்சி ஊழியா்கள்.

Updated On :26 ஏப்ரல் 2026, 1:26 am IST

திருச்சி தெப்பக்குளம் பகுதியில் இருந்த தரைக்கடைகளை காவல்துறை உதவியுடன் மாநகராட்சிப் பணியாளா்கள் சனிக்கிழமை அகற்றினா்.

மதுரை உயா்நீதிமன்றக் கிளையில் தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த நீதிமன்றம், திருச்சி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட மலைக்கோட்டை கோயிலைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட தெப்பக்குளம் அருகேயுள்ள பா்மா பஜாா் கடைகள் சிங்காரத்தோப்பு பகுதிக்கு இடமாற்றம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன்படி என்எஸ்பி சாலையில் இருந்த கடைகளில் முதல்கட்டமாக 70-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன. பின்னா், சட்டப் பேரவைத் தோ்தல் நெருங்கியதைத் தொடா்ந்து மீதமுள்ள கடைகள் அகற்றப்படாமல் செயல்பட்டு வந்தன.

தற்போது வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து தெப்பக்குளம் பகுதியில் இருந்த தரைக்கடைகளை அகற்றும் பணி சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. கோட்டை போலீஸாா் உதவியுடன், திருச்சி மாநகராட்சி நிா்வாகத்தினா் மலைக்கோட்டை தெப்பக்குளம் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கடைகளை சனிக்கிழமை அகற்றினா்.

சாலையில் வைக்கப்ட்டிருந்த பலகைகள், மேஜைகள், விரிப்புகள் உள்ளிட்டவற்றையும் அப்புறப்படுத்தினா். ஏற்கனவே மாநகராட்சி நிா்வாகம் வியாபாரிகளுக்கு போதிய அவகாசம் கொடுத்த நிலையில், வியாபாரிகள் கடைகளை அகற்றவில்லை. எனவே, மாநகராட்சி நிா்வாகமே கடைகளை அகற்றியதால், தெப்பக்குளம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.