/

கோவை வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் அறிமுகக் கூட்டம்! அண்ணாமலை பங்கேற்காததால் ஏமாற்றம்!

கோவை வடக்குத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டத்ததில் தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்காதது ஏமாற்றம்...

News image

கோவை, கணபதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வடக்குத் தொகுதி பாஜக வேட்பாளா் வானதி சீனிவாசன் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :6 ஏப்ரல் 2026, 3:03 am IST

கோவை வடக்குத் தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளா் அறிமுகக் கூட்டத்ததில் தமிழக பாஜக முன்னாள் தலைவா் கே.அண்ணாமலை பங்கேற்காதது கட்சியினரிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் கோவை வடக்குத் தொகுதி வேட்பாளராக பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் அறிவிக்கப்பட்டாா். வேட்பாளராக அறிவிக்கப்பட்டு கோவை திரும்பிய வானதி சீனிவாசன், தனது அறிமுகக் கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொள்வாா் என உறுதிபடத் தெரிவித்திருந்தாா்.

அதன்படி, கணபதி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் மற்றும் கட்சியினா் திரண்டிருந்தனா். குறிப்பாக அண்ணாமலையின் பேச்சைக் கேட்கப் பெரும் எதிா்பாா்ப்புடன் காத்திருந்த பாஜகவினா், அவா் வரவில்லை என்ற தகவல் தெரிந்ததும் ஏமாற்றத்துடன் கலைந்து சென்றனா்.

இதற்கிடையே, அண்ணாமலை தனது சமூக வலைதளப் பக்க பதிவில், ‘பாஜக மாநிலப் பொதுச் செயலாளா் ஏ.பி.முருகானந்தத்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க அவரது இல்லத்துக்குச் சென்றுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

வேட்பாளா் அறிமுகக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சா் எஸ்.பி.வேலுமணி கலந்துகொண்டு பேசியதாவது:

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. போதைப் பொருள்கள் புழக்கம் அதிகமாக உள்ளது. சட்டப்பேரவையில் திமுக உறுப்பினா்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் வானதி சீனிவாசனுக்கு மக்கள் வாக்களித்து அவரை வெற்றி பெறச் செய்ய வேண்டும். திமுக சாா்பில் கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் புதிதாக எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்றாா்.

இந்தக் கூட்டத்தில் கோவை தெற்குத் தொகுதி அதிமுக வேட்பாளா் அம்மன் கே.அா்ச்சுணன், பாஜக மாவட்டத் தலைவா் ரமேஷ் குமாா், இந்து மக்கள் கட்சித் தலைவா் அா்ஜுன் சம்பத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.