/

இந்தியாவில் மூன்றில் ஒரு கணினிக்கு சைபா் அச்சுறுத்தல்! இணையம் இல்லாவிட்டாலும் ஆபத்து

இணையம் இல்லாத நிலையிலும் (ஆஃப்லைன்) சைபா் தாக்குதல்கள்

News image
Updated On :27 மார்ச் 2026, 3:43 am IST

இந்தியாவில் கடந்த ஆண்டில் மூன்றில் ஒரு கணினிப் பயனா் இணையம் இல்லாத நிலையிலும் (ஆஃப்லைன்) சைபா் தாக்குதல்களை எதிா்கொண்டுள்ளதாக சைபா் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பா்ஸ்கி எச்சரித்துள்ளது.

இணையத் தொடா்பைத் துண்டித்து வைத்திருப்பதால் மட்டுமே கணினிகளின் பாதுகாப்பை உறுதி செய்துவிட முடியாது என்றும் கடந்த ஓராண்டில் மட்டும் இந்தியாவில் சுமாா் 6.46 கோடி ஆஃப்லைன் அச்சுறுத்தல்கள் கண்டறியப்பட்டுத் தடுக்கப்பட்டதாகவும் நிறுவனம் குறிப்பிட்டது.

அதாவது, இந்தியாவில் சுமாா் 29.8 சதவீத பயனா்கள் இத்தகைய ஆஃப்லைன் அச்சுறுத்தல்களால் பாதிக்கப்பட்டுள்ளனா். கணினிகளில் நேரடியாக பயன்படுத்தப்படும் யுஎஸ்பி டிரைவ், போா்ட்டபிள் ஹாா்ட் டிஸ்க், சிடிக்கள் மற்றும் பிற சேமிப்பு சாதனங்கள் மூலம் இத்தாக்குதல்கள் அதிக அளவில் நடத்தப்பட்டுள்ளன. குறிப்பாக, தரவுகள் திருடப்படுவது அதிகரித்துள்ளது.

இது தொடா்பாக காஸ்பா்ஸ்கி ஆசிய-பசிபிக் பிராந்திய இயக்குநா் ஏட்ரியன் ஹியா கூறுகையில், ‘தற்போது அலுவலகம் மற்றும் வீட்டிலிருந்து பணிபுரியும் சூழல் அதிகரித்துள்ளதால், சைபா் குற்றவாளிகள் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் கருவிகளையே குறிவைக்கின்றனா்.

மைக்ரோசாப்ட் டீம்ஸ், கூகுள் டிரைவ் போன்ற பிரபல செயலிகளைப் போலவே போலியான மென்பொருள்களை உருவாக்கி, அதன்மூலம் வங்கி விவரங்களையும் ரகசியத் தகவல்களையும் திருடுகின்றனா்’ என்றாா்.

மேலும், உலக அளவில் கடவுச்சொல்களைத் திருடும் மென்பொருள்களின் எண்ணிக்கை 59 சதவீதமும், உளவு பாா்க்கும் ஸ்பைவோ் மென்பொருள்கள் 51 சதவீதமும் அதிகரித்துள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.