/

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த விதிகள் வகுக்கக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் தேவையான விதிகளை வகுத்து அறிவிக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு 8 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :2 மே 2026, 3:13 am IST

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் தேவையான விதிகளை வகுத்து அறிவிக்க கோரிய மனுவுக்கு தமிழக அரசு 8 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு பழைய ஓய்வூதியத் திட்ட மீட்பு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளா் நந்தகோபால் மற்றும் 3 மாவட்ட ஒருங்கிணைப்பாளா்கள் சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தமிழகத்தில் அரசு ஊழியா்களுக்கு புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.

2026 ஜனவரி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் வகையில் விதிகள் மற்றும் செயல்பாட்டு நெறிமுறைகளை வகுத்து அறிவிக்க வேண்டும். உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தின்படி, பழைய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தபின் பணியில் சோ்ந்து 2026-ஆம் ஆண்டுக்கு முன் ஓய்வு பெற்ற தங்களுக்கு புதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சிறப்பு கருணை ஓய்வூதியம் பெற தகுதி உள்ளது.

ஆனால், உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த இதுவரை விதிகளோ, செயல்பாட்டு நெறிமுறைகளோ வகுக்கப்படவில்லை. விதிகள் வகுக்கவில்லை எனில், தங்களுக்கு கருணை ஓய்வூதிய பலன்களைப் பெற இயலாது.

எனவே, விதிகள் செயல்பாட்டு நெறிமுறைகளை வகுத்து அறிவிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு தமிழக அரசு 8 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.