தமிழ்நாட்டில் நிலவும் மின் வெட்டு பிரச்னையை விமர்சித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று பேசினார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகின்றது.
இந்த விவாதத்தில் கலந்துகொண்ட எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மின்வெட்டு பிரச்னை குறித்து பேசியதாவது:
”நமது முதல்வர் ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில், தமிழ்நாட்டிலேயே அவரது பெரம்பூர் தொகுதியை நம்பர் 1 ஆக மாற்றிவிட்டார். மின்வெட்டில் பெரம்பூர் தொகுதிதான் நம்பர் 1 ஆக உள்ளது.
ஆளுங்கட்சிக்காரர்கள் கூறுகிறார்கள், அண்ணன் பவருக்கு வந்தால் தமிழ்நாடு மாறும் என்று பார்த்தோம், ஆனால், அண்ணன் கைக்கு பவர் வந்ததில் இருந்து தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த மின் துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார்,
”தமிழ்நாட்டில் எதனால் மின்வெட்டு ஏற்படுகிறது என்று ஒவ்வொரு நாளும் விளக்கம் அளித்து வருகிறோம். இந்த துறையில் ரூ. 2.5 லட்சம் கோடி கடன் இருக்கிறது. 15 ஆண்டுகளாக எந்த உள்கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதுதொடர்பான விரிவான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.
இந்த துறையில் 70,000 பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருக்கின்றன. குழுக்கள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு பிரச்னையாக சரி செய்யப்பட்டு வருகின்றது. பொதுவாக கூறாமல், எந்த இடத்தில் மின் வெட்டு ஏற்பட்டது, எவ்வளவு நேரம் ஏற்பட்டது என்பதை தெரிவிக்க வேண்டும்.” எனத் தெரிவித்தார்.
சிடிஆர் நிர்மல் குமார் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முன்னாள் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:
”மின்வெட்டு பிரச்னை குறித்து அமைச்சர் கூறினார். கடந்த 5 ஆண்டுகளில் சீரான மின் விநியோகத்துக்காக 393 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு படிப்படியாக செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. 90 ஆயிரம் மின்மாற்றிகள் புதிதாகவும் பழுதடைந்ததை சரிசெய்தும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மின் தேவைகளுக்கு ஏற்ப ஏற்பாடுகளை அரசு நிர்வாகத்தின் கடமை. ஆனால், புது அரசு வந்ததற்கு பிறகு, மின் துறை அலுவல் கூட்டங்கள் நடைபெறவில்லை. கடந்த 5 ஆண்டுகள் தற்போதுள்ள ஊழியர்களை வைத்துதான் மின் விநியோகம் சீராக செய்யப்பட்டது.
100 க்கும் மேற்பட்ட துணை மின் நிலையப் பணிகள் ரூ. 10 ஆயிரம் கோடியில் நடைபெற்று வருகின்றன என்று உங்கள் அரசே பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளது. அதெல்லாம் கடந்த காலங்களில் தொடங்கப்பட்டது.” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, சிடிஆர் நிர்மல் குமார் பேசியதாவது:
”கடந்த ஆட்சியில் அறிவிப்புகள் மட்டும்தான் வெளியிட்டுள்ளார்கள். 90 ஆயிரம் மின்மாற்றிகள் வாங்கியது தொடர்பாக சிபிஐ வழக்கு தொடர்ந்துள்ளது. இரண்டு நாள்களில் வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்.” எனத் தெரிவித்தார்.
மின் வெட்டு பிரச்னையால் தமிழ்நாட்டை இருட்டாக்கி முதலீட்டை கோட்டை விட்டுவிடாதீர்கள். தமிழ்நாட்டு மக்கள் குழந்தையுடன் சாலைகளில் போராடி வருகிறார்கள். முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு திமுக பொதுக் கூட்டத்தில் பேசச் சென்றார். மின் வெட்டு ஏற்பட்டவுடன், அதற்கு எதிரான போராட்டமாக மாற்றினோம்.
செங்கல்பட்டு அருகே 75 வயது மூதாட்டிக்கு உடல்நலக் குறைவு காரணமாக வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சைப் பெற்று வந்தார். திடீர் மின் வெட்டால் அவருக்கு ஆக்சிஜன் சப்ளை நின்று உயிரிழந்தார். முதல்முறையாக மின் வெட்டு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.
விசிக அலுவலகத்துக்கு அக்கட்சித் தலைவர் திருமாவளவனை பார்க்க காங்கிரஸ் தலைவர் ப. சிதம்பரம் சென்றபோது மின் வெட்டு ஏற்பட்டுள்ளது. பவரில் சேர் கொடுத்த ஆளும் கட்சியால், அக்கட்சி அலுவலகத்துக்கு மின் வெட்டு கொடுக்க முடியவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்னதாக ஆளுங்கட்சி தலைமை அலுவலகத்திலேயே மின் வெட்டு ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணை சரியான நேரத்தில் திறக்கப்படாத சூழலில், பம்பு செட்டுகளில் மோட்டர் இயக்க விவசாயிகளுக்கும் மின்சாரம் இல்லை. இதற்கெல்லாம் திமுகதான் காரணம் எனக் கூற ஆரம்பித்துவிட்டார்கள். எங்கள் ஆட்சியில் இல்லாத மின்வெட்டு தற்போது வரக் காரணம் என்ன? நிர்வாக குளறுபடியா? தொழில்நுட்பக் குளறுபடியா? அதை தீர்க்க எவ்வளவு நாள் தேவைப்படும் என்பதை முதல்வர் பதிலுரையில் தெரிவிக்க வேண்டும்.” எனத் தெரிவித்துள்ளார்.
Summary
Opposition leader Udhayanidhi in the Assembly regarding the power cut issue in Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!

பேரவை உறுப்பினர்களின் குரலை நசுக்குவதுதான் தவெகவின் மாற்றமா? உதயநிதி

உதயநிதி வைத்த கோரிக்கை! உடனே ஏற்றுக்கொண்ட முதல்வர் விஜய்!

தவெக - பாஜக இணக்கம்? ஒரு வரிகூட மாற்றாத ஆளுநர்! அனைத்தும் திமுக அரசின் திட்டங்கள்!
விடியோக்கள்

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு

ஹாலிவுட்டில் பயிற்சி: விஜய்யின் அறியாத பக்கங்கள்! | Actor Vijay |
தினமணி செய்திச் சேவை

மேகதாது தீர்மான திருத்தத்தை ஏற்கவில்லை! வெளிநடப்புக்கு பின் EPS பேட்டி | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly
இணையதளச் செய்திப் பிரிவு


