/

புதுச்சேரியில் புதிய கூட்டணி: காங்கிரஸ்-தவெக இணைந்துதான் முடிவை எடுக்க வேண்டும்: கிரிஷ் சோடங்கர்

புதுச்சேரியில் புதிய கூட்டணியை ஏற்படுத்துவது தொடர்பாக காங்கிரஸும், தவெகவும் இணைந்துதான் முடிவு எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.

News image

புதுச்சேரி. - New alliance in Puducherry: Congress and TVK must take the decision together: Girish Chodankar

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

புதுச்சேரியில் புதிய கூட்டணியை ஏற்படுத்துவது தொடர்பாக காங்கிரஸும், தவெகவும் இணைந்துதான் முடிவு எடுக்கவேண்டும் என்று காங்கிரஸ் மேலிடப் பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.

புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் பேசுகையில், தவெகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முடிவு எடுத்தது. மேலும், தவெகவும் இந்தக் கூட்டணிக்காக வேண்டுகோள் விடுத்திருந்தது. இதையடுத்து இக் கூட்டணிக்கான ஆதரவைத் தெரிவித்தோம். புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் தொடர்பாக புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டிதான் முடிவு எடுக்க வேண்டும்.

மேலும், புதுச்சேரியில் இந்தப் புதிய கூட்டணி தொடர்பாக தவெகவிடம் இருந்தும் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியிடம் இருந்தும் இதுவரை எந்த யோசனையும் வரவில்லை. இந்த இரண்டு கட்சிகளும் இணைந்துதான் கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க வேண்டும். மேலும், தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் தொடர்பாக எந்த முடிவாக இருந்தாலும் புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டிதான் முடிவு எடுக்க வேண்டும். மேலும், கட்சிக்கு இளம் ரத்தம் பாய்ச்ச உள்ளோம்.

கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள், வெளியேறியவர்கள் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குத் திரும்ப வேண்டும். மறுசீரமைப்புச் செய்து கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். சட்டப்பேரவைத் தேர்தலின்போது கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை தொடரும். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு கட்சித் தலைவர் பதவியை ராஜிநாமா செய்து வைத்திலிங்கம் எம்.பி. கடிதம் கொடுத்திருந்தார்.

இருப்பினும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இதுவரை அந்த ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. காங்கிரஸின் நட்பு ரீதியிலான போட்டியால்தான் தோல்வி அடைந்தோம் என்று இந்தியா கூட்டணியில் இருந்த திமுக கூறியுள்ளதே என்று கேட்டதற்கு, தோல்விக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. கூட்டணி பேச்சுவார்த்தையின்போது புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டி தலைவர்களைச் சரிவர கலந்து ஆலோசிக்கவில்லை. தொகுதி ஒதுக்கீடும் சரியாக கலந்து ஆலோசிக்கப்படவில்லை.

நட்பு ரீதியாக போட்டியிட்டவர்களும் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு பி படிவம் கொடுத்ததும் காங்கிரஸ் கட்சிதான். தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். தமிழக ஆளுநர் உரையில் சமூகக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இதை வலியுறுத்தி வருகிறார் என்றார் கிரிஷ் சோடங்கர்.

அரசியல் விவகாரக் குழு ஆலோசனை தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழு சனிக்கிழமை கூடி முக்கிய விவாதத்தை நடத்தியது. புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி தட்டாஞ்சாவடி, மங்கலம் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜிநாமா செய்தார். இதனால் இத் தொகுதியில் இடைத் தேர்தல் வருகிறது.

இதையடுத்து தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து சனிக்கிழமை காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் அரசியல் விவகாரக் குழுகூடி விவாதித்தது. கட்சியின் மாநிலத் தலைவர் வெ. வைத்திலிங்கம் எம்.பி. தலைமை வகித்தார். கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். இதில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தோல்வி, எதிர்க்காலத் திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இக் கூட்டத்தில் முன்னாள் முதல்வர் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் மு.கந்தசாமி, சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், முன்னாள் எம்எல்ஏக்கள் பாலன், வைத்தியநாதன், அனந்தராமன், மகளிர் அணித் தலைவரி நிஷா, பொதுச்செயலர்கள் தனுஷ், இளையராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Summary

Congress observer Girish Chodankar stated that the Congress and TVK must jointly take a decision regarding the formation of a new alliance in Puducherry.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.