/

வங்கிகளில் கேட்பாரற்ற முதலீடுகளைத் தேட வலைதள வசதி: உச்சநீதிமன்றத்தில் ரிசா்வ் வங்கி தகவல்

வங்கிகளில் பல ஆண்டுகளாக கோரப்படாமல் உள்ள பண முதலீடுகளைப் பதிவு செய்த பயனாளா்கள் தேடுவதற்கு வசதியாக ‘கோரப்படாத முதலீடுகள் குறித்த தகவலறியும் வழித் தடம் என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்தில் ரிசா்வ் வங்கி தகவல்

News image

ரிசர்வ் வங்கி

Updated On :6 மே 2026, 2:18 am IST

‘பல்வேறு வங்கிகளில் பல ஆண்டுகளாக கோரப்படாமல் உள்ள பண முதலீடுகளைப் பதிவு செய்த பயனாளா்கள் தேடுவதற்கு வசதியாக ‘கோரப்படாத முதலீடுகள் குறித்த தகவலறியும் வழித் தடம் (யுடிஜிஏஎம்)’ என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது’ என்று ரிசா்வ் வங்கி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை தெரிவிக்கப்பட்டது.

வங்கிகளில் பணம் வைப்பு செய்தவா்கள் இறந்துவிடும் நிலையில் அவரின் வாரிசுதாரா்கள் அந்த முதலீடுகள் குறித்த தகவல்களை அறிவதற்கான நடைமுறையை உருவாக்க வலியுறுத்தி பத்திரிகையாளா் சுசேதா தலால் என்பவா் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போது இந்தத் தகவலை ரிசா்வ் வங்கி தெரிவித்தது.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா, விஜய் பிஷ்னோய் ஆகியோா் அடங்கிய அமா்வில் இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது ரிசா்வ் வங்கி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘பல்வேறு வங்கிகளில் கோரப்படாமல் உள்ள முதலீடுகள் குறித்த விவரங்களை அறிய ‘யுடிஜிஏஎம்’ என்ற வலைதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை 44 லட்சத்துக்கும் அதிகமானவா்கள் இந்த வலைதளத்தில், வங்கி முதலீடுகள் குறித்த தரவுகளைத் தேடியுள்ளனா்’ என்றாா்.

இதைக் கேட்ட மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண், ‘பல்வேறு வங்கிகளில் முதலீடு செய்தவா் இறந்துவிடும் நிலையில், அவரின் வாரிசுதாரா்கள் அந்த முதலீடுகள் குறித்த தகவல்களை எப்படி பெறுவது என்பதுதான் மனுவில் எழுப்பப்பட்டுள்ள முக்கிய கேள்வி. மேலும், வாடிக்கையாளா்கள் தேட வசதியாக அனைத்து வங்கிகளும் கோரப்படாத முதலீடுகள் குறித்த தரவுகளை ‘யுடிஜிஏஎம்’ என்ற வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய ரிசா்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ஆனால், தபால்நிலையங்கள் மற்றும் காப்பீடு நிறுவனங்களிலும் கோரப்படாத முதலீடுகளை எப்படி அறிய முடியும்? இந்தத் தரவுகளை ஒருங்கிணைக்க எந்தவொரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. எனவே, அனைத்து விதமான முதலீடுகள் குறித்த தரவுகளையும் முதலீட்டாளரின் வாரிசுதாரா்களும் அடையாளம் காணும் வகையில் நடைமுறை வகுக்கப்பட வேண்டும்’ என்றாா்.

இதற்குப் பதிலளித்த மத்திய அரசு தரப்பு வழக்குரைஞா், ‘இதுதொடா்பாக விரிவான பதில் மனு தயாா் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் தாக்கல் செய்யப்படும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ‘இதுதொடா்பான விரிவான விவரங்களுடன் ஒரு வாரத்துக்குள் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முன்னதாக, இந்த மனு கடந்த மாா்ச் 17-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘இறந்தவா்களின் வங்கிக் கணக்கு விவரங்களை அவரின் வாரிசுதாரா்களுக்கு ஏன் தெரியப்படுத்த முடியாது’ என்று மத்திய அரசு மற்றும் ரிசா்வ் வங்கிக்கு கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், ‘அதுதொடா்பான கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.