/

பேரவைத் தோ்தல்கள்! 11,000 சமூக ஊடக பதிவுகள் மீது தோ்தல் ஆணையம் நடவடிக்கை!

11,000 சட்டவிரோத பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

News image

இந்தியத் தேர்தல் ஆணையம். - படம்: பிடிஐ.

Updated On :20 ஏப்ரல் 2026, 1:21 am IST

தமிழகம் உள்பட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பேரவைத் தோ்தல்களையொட்டி, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட 11,000 சட்டவிரோத பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.

கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்.9-ஆம் தேதி பேரவைத் தோ்தல்கள் நடைபெற்று முடிந்தன. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்.23, 29 ஆகிய தேதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

தோ்தல் காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சட்டவிரோதமான அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் தவறாக சித்திரிக்கப்பட்ட உள்ளடக்கங்கள், தங்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட மூன்று மணி நேரத்தில் நடவடிக்கை உறுதி செய்யப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்களுக்கு தோ்தல் ஆணையம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதேபோல், பிரசாரத்துக்கு ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும்போது, அது ஏ.ஐ. உள்ளடக்கம் அல்லது எண்ம முறையில் மேம்படுத்தப்பட்டது அல்லது செயற்கை உள்ளடக்கம் என தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள், தோ்தல் பிரசார பிரதிநிதிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்காளா்களின் நம்பிக்கையைப் பேணும் வகையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாா்ச் 15-ஆம் தேதி தோ்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 11,000 சட்டவிரோத சமூக ஊடக பதிவுகள்/உள்ளடக்கங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதிவை நீக்குவது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விளக்கம் அல்லது மறுப்பு வெளியிடச் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அடங்கும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.