மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

‘சிஎம் சார், 5 வருசத்துல என்ன பண்ணிருக்கீங்க?’ என கேட்டால்... ஸ்டாலின் விளக்கம்!

முதல்வராக 5 ஆண்டுகால பணிகள் குறித்து விடியோ வெளியிட்டு மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளதைப் பற்றி...

News image

முதல்வர் ஸ்டாலின். - (விடியோவிருந்து...)

Updated On :21 ஏப்ரல் 2026, 9:01 am IST

முதல்வராக 5 ஆண்டுகால பணிகள் குறித்து விடியோ வெளியிட்டு மு.க. ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாள்களே இருக்கும் நிலையில், தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரசாரம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்பில் முழுவீச்சில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர். ஏப்.23 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள நிலையில், இன்று மாலை பிரசாரம் நிறைவடைகிறது.

இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

என் மேலே நம்பிக்கை வைத்து என்னை முதல்வராக்கி ஐந்து ஆண்டுகள் ஆகிருக்கின்றன. சிஎம் சார் முதல்வராக ஐந்து ஆண்டுகள் இருந்து என்ன செய்தீர்கள் என்று கேட்டால், மணி கணக்காக, ஏன் நாள் கணக்காகக்கூட பேச முடியும்.

எப்போதுமே தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற மத்திய அரசை எதிர்த்து சண்டை செய்திருப்பதை என்னால் இன்னும் பெருமையாகச் சொல்லிக்கொள்ள முடியும். சமூக நீதியுடன்கூடிய வளர்ச்சி என்பதுதான் நம்முடைய முதன்மையான குறிக்கோள்.

அந்த வகையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு மகப்பேறு உதவித்தொகை, மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பேருந்துப் பயணம், தோழி மகளிர் விடுதி, மக்களைத் தேடி மருத்துவம் எனக் கருவில் இருக்கும் குழந்தையில் இருந்து வயது முதிர்ந்த மூத்த குடிமக்கள் வரைக்கும் எல்லோரும் பயனடைகின்ற வரையில் நிறையத் திட்டங்களைக் கொண்டு வந்தோம்.

நம்ம கிட்ட காசு இருந்தால் பிடுங்கிக் கொள்வார்கள், நிலம் இருந்தால் எடுத்துக் கொள்வார்கள், ஆனால், படிப்பை மட்டும் எடுத்துக் கொள்ள முடியாது. கல்வி ஒன்றுதான் யாரும் உங்களிடமிருந்து எடுத்துக் கொள்ள முடியாத சொத்து.

நான் பதவியேற்றதிலிருந்து மாணவர்களைச் சந்திக்கும் போதெல்லாம், இதே கருத்தைத்தான் சொல்லிக்கொண்டிருக்கிறேன். கல்வி ஒன்றுதான் யாரும் திருட முடியாத ஒரே சொத்து.

அதனால்தான், மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம், கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு மடிக்கணினி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ. 1,000, நான் முதல்வன் திட்டம் என மாணவர்களுக்கு மட்டும் அவ்வளவுத் திட்டங்கள் இருக்கின்றன. தொழில்துறை, விவசாயம், கல்வி என அனைத்துத்துறைகளிலும் முன்னேறியிருக்கிறது நம்முடைய தமிழ்நாடு.

அதற்கு அடையாளமாக 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழ்நாட்டில் வளர்ச்சி எந்த மாநிலமும் தொடாத 11.19 சதவிகிதம் என்ற இரட்டை இலக்கத்தைத் தொட்டிருக்கிறது. இன்னும் எல்லா உயரமும் தொடுவோம் என்ற உறுதியும் எனக்கு இருக்கிறது. இப்படி எல்லா வகையில் நாம் முன்னேறியிருந்தாலும், ஒரு சில குறைகளும் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.

ஏன்னென்றால், நமது ஆட்சி குறித்த கருத்துகளை காது கொடுத்துக் கேட்பவன் நான். குறைகளாகச் சொல்லப்பட்ட விஷயங்களைக்கூட மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது ரெம்பவே சிறப்பாகத்தான் இருக்கிறோம். இருந்தாலும், எல்லாவிதமாக குறைகளையும் சரிசெய்ய நடைமுறைப்படுத்திவிட்டோம். அதற்கான விளைவுகளை விரைவில் நீங்கள் பார்ப்பீர்கள்.

கடந்த வாரம் உங்களுக்கே தெரியும். மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவைக் கொண்டு வந்தார்கள். மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி தொழில்துறை வளர்ச்சியில் முன்னோடி மாநிலமாக இருக்கும் நம்மைத் தண்டிப்பதற்காகவே இந்த மசோதாவை கொண்டு வந்த மாதிரி இருந்தது. அந்த மசோதா வந்தவுடனே அதற்கு முதல் எதிர்ப்பும், அந்த மசோதாவோட நகல் எரிப்பும் தமிழ் மண்ணில் என் மூலமாக ஆரம்பித்தது.

நாம் கொளுத்திய அந்த நெருப்புதான் இன்று கொழுந்துவிட்டு எரிந்து அந்த மசோதாவை சாம்பல் ஆகிக்கியிருக்கிறது. தேர்தல் நடக்கும் நேரத்தில் இவ்வளவு ஆணவத்துடன் நம்மை வஞ்சிக்க நினைக்கிறார்கள் என்றால், அவர்களின் அடிவருடி எடப்பாடி பழனிசாமி, வெற்றிபெற்று ஆட்சிக்கு வந்துவிட்டால்,

என்னென்ன கொடுமைகள் எல்லாம் இங்கு அரங்கேறும் என்று உங்களுக்கு நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை. பாஜக மாதிரி மதவாத சக்திகள், திமுகவை ஹிந்துகளுக்கு எதிரான கட்சி என்ற பொய்யான பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். திமுக ஒரு போதும் ஹிந்துகளுக்கு எதிரான கட்சி அல்ல. திமுக ஆட்சியில்தான் ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம்.

ரூ. 7,000 கோடி மதிப்பிலான கோயில் நிலங்களை மீட்டிருக்கிறோம். இப்படி பொய்யான பிரசாரம் செய்பவர்களுக்கு ஒன்றேயொன்று சொல்லிக்கொள்கிறேன். இந்தியாவிலேயே 60 வருடங்களாக திராவிடக் கட்சிகள் ஆளுங்கின்ற தமிழ்நாட்டில்தான் அதிகளவிலான கோயில்கள் இருக்கின்றன. இன்றைக்கு அதிமுக என்னும் அடிமைக்கட்சிக்கு உரிமையாளராக இருக்கிறது பாஜக.

அவர்கள் (பாஜக) ஆட்சி செய்கின்ற மாநிலங்களில் கிறிஸ்துமஸ் அன்று தேவாலயங்களில் புகுந்து கலவரம் செய்வது, புல்டோசர் வைத்து இஸ்லாமிய மக்களின் வீடுகளை இடிப்பது என எவ்வளவோ கொடுமைகளைச் செய்கிறார்கள். இது எல்லாம் தெரிந்தும் எடப்பாடி பழனிசாமி அவர்களின் காலில் விழுந்து கிடக்கிறார்.

ஆனால், சிறுபான்மையினர் மக்களுக்கு எதாவது ஒன்று என்றால் நாங்கள் (திமுக) எப்போதுமே களத்தில் நிற்போம். அவர்கள் உரிமைகளுக்காக எப்போதுமே போராடுவோம். 1975 ஆம் ஆண்டில் அன்றைய மத்திய அரசு மிசா என்கிற போரை நடத்திய போது அதனை எதிர்த்துப் போரிட்டவன்தான் இந்த ஸ்டாலின்.

அப்போது நான் ஒரு இளைஞன், கலைஞரின் மகன். இன்றைக்கு நான் அப்பா என்ற நிலையில் இருக்கிறேன். இப்போதும் நமக்கான போருக்கு எதிரான நான் எதிர்த்து நிற்கிறேன். எந்த பிரச்சினை வந்தாலும், தமிழ்நாட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் பாதுகாத்து நிற்பேன்.

இது என்னுடைய உறுதிமொழி. அவர்கள் எத்தனை முறை முயற்சி செய்தாலும், திமுக இருக்கும் வரை பாஜகவும் அவர்களின் கொடூரமான மக்கள் விரோத சித்தாந்தமும் ஜெயிக்க முடியவில்லை என்று வரலாறு சொன்னால் போதும்.

நம்முடைய உரிமையை, உழைப்பை, நம்முடைய மக்களின் கலாசாரத்தை, மொழியை அழிக்க வேண்டுமென்று நினைப்பவர்களோ, அவர்களின் அடிமைகளோ நமக்கு வேண்டாம். இந்த வளர்ச்சியும் வளமான எதிர்காலமும் அடுத்த ஐந்தாண்டுகள் தொடர வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Summary

M.K. Stalin has issued a video explaining his work during his five-year tenure as Chief Minister.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.