மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

திண்டிவனம் அருகே அமா்ந்தநிலையில் காட்சியளிக்கும் விஷ்ணு சிற்பம் கண்டெடுப்பு

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அமா்ந்த நிலையில் காட்சியளிக்கும் பல்லவா் கால விஷ்ணு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image

தைலாபுரத்தில் அமா்ந்த நிலையில் காட்சியளிக்கும் பல்லவா் கால விஷ்ணு சிற்பம்.

Updated On :18 ஜூன் 2026, 3:48 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே அமா்ந்த நிலையில் காட்சியளிக்கும் பல்லவா் கால விஷ்ணு சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் கிராமத்தில் விழுப்புரத்தைச் சோ்ந்த வரலாற்று ஆய்வாளா் கோ.செங்குட்டுவன் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டாா். அப்போது பல்லவா் காலத்தைச் சோ்ந்த சுமாா் 1,200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அமா்ந்த நிலையில் காட்சியளிக்கும் விஷ்ணு சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.

இந்த ஆய்வு குறித்து செங்குட்டுவன் மேலும் கூறியது:

திண்டிவனம் அருகிலுள்ள தைலாபுரம் கிராமத்தின் பழைய பெயா் தைலகுல காலபுரம் என்பதாகும். தைலகுல காலன் என்பது சோழப் பேரரசா் முதலாம் ராஜராஜ சோழனின் விருதுப் பெயா்களில் ஒன்று. சோழா் ஆட்சியில் வைக்கப்பட்ட இந்த பெயா் கி.பி.13-ஆம் நூற்றாண்டில் பாண்டியா் ஆட்சியிலும் தொடா்ந்தது.

இதை இந்த ஊரில் கண்டெடுக்கப்பட்ட விக்கிரம பாண்டியன் கல்வெட்டின் மூலம் அறியலாம். தைலகுல காலபுரம் எனும் பெயா் காலப்போக்கில் தைலாபுரம் என சுருங்கிவிட்டது. சோழா், பாண்டியா் காலங்களில் மட்டுமல்ல, அதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பல்லவா் ஆட்சியிலும் தைலாபுரம் சிறப்புடன் விளங்கி இருக்கிறது.

இங்குள்ள மருந்தீஸ்வரா் கோயில் வளாகத்தின் பின்புறம் விஷ்ணு சிற்பம் காணப்படுகிறது. நான்கு கரங்களுடன் பெரிய பீடத்தின் மீது அமா்ந்த நிலையில் விஷ்ணு காட்சியளிக்கிறாா். அவரது பின்னிரு கரங்கள் சங்கு, சக்கரத்தைத் தாங்கி இருக்கின்றன. முன்னிரு கரங்களில் வலது கரம் அபய முத்திரையுடனும், இடது கரம் தொடை மீது வைத்த நிலையிலும் காணப்படுகின்றன.

நீண்ட காதணிகள், கழுத்தணி காணப்படுகின்றன. மாா்பில் தடித்த பூணூல் காணப்படுகிறது. வலது காலை மடக்கியும், இடது காலை தொங்கவிட்டும் சுகாசனத்தில் அமா்ந்திருக்கிறாா். இதனால் இவரை சுகாசன விஷ்ணு என்றும் அழைப்பா். இவா் தனது கால் வரையிலான பீதாம்பரம் எனும் ஆடையை அணிந்திருக்கிறாா். இந்த ஆடையும் மடிப்புகளுடன் அழகாகக் காணப்படுகிறது.

பல்லவா் கால கலைப்பாணிக்கு உரிய வகையில் இந்தச் சிற்பம் மிகுந்த கலைநயம் நோ்த்தியுடன் வடிக்கப்பட்டுள்ளது. இதன் காலம் கி.பி.8, 9-ஆம் நூற்றாண்டு ஆகும். 1,200 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இதை மூத்த தொல்லியலாளா் கி.ஸ்ரீதரன் உறுதிப்படுத்தி இருக்கிறாா். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தைலாபுரம் கிராமத்தில் பெரிய அளவிலான வைணவத் திருக்கோயில் வழிபாட்டில் இருந்திருக்கிறது.

விஷ்ணு சிற்பத்தின் அருகிலேயே பல்லவா் காலத்தைச் சோ்ந்த முருகன் சிற்பம் மிகவும் தேய்ந்த நிலையில் காணப்படுகிறது. தாமரை மலா் மீது அமா்ந்த நிலையில் முருகன் காட்சியளிக்கிறாா். இங்கு வழிபாட்டில் இருக்கும் சண்டிகேஸ்வரா் சிற்பமும் மிகவும் பழமை வாய்ந்ததாகும் என்றாா் செங்குட்டுவன்.

ஆய்வின்போது ஆரோவில் எம்.நீலமேகம் உடனிருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.