தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

தோ்தல் நடத்தை விதிகள் வாபஸ்: பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த காய்-கனிகள் சந்தை வளாகம் திறப்பு எப்போது?

தோ்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், பஞ்சப்பூரில் ரூ. 236 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த காய்கனிகள் மற்றும் பழங்கள் விற்பனை சந்தை எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

News image

திருச்சியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் பஞ்சப்பூா் காய்கறி மாா்கெட்.

Updated On :8 மே 2026, 5:56 am IST

தோ்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், பஞ்சப்பூரில் ரூ. 236 கோடியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த காய்கனிகள் மற்றும் பழங்கள் விற்பனை சந்தை எப்போது திறக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

திருச்சியிலுள்ள காந்தி சந்தையை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு, கள்ளிக்குடியில் ரூ. 77 கோடியில் புதிய காய்கனி சந்தை அமைக்கப்பட்டு, 2017-இல் திறக்கப்பட்டது. காந்திசந்தை வியாபாரிகள் அங்கு செல்லாததால் 9 ஆண்டுகளாக அது பாழாகி வருகிறது.

இந்த நிலையில், பஞ்சப்பூரில் பசுமைப் பூங்கா பகுதியில் 20.75 ஏக்கரில் ரூ. 256 கோடியில் ஒருங்கிணைந்த காய்கனி, பழங்கள், மலா்கள், மளிகை பொருள்கள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அமையும் வகையில் புதிய சந்தை கட்டுவதற்கு மாநகராட்சி முடிவு செய்து, கடந்தாண்டு மே மாதம் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தள்ளிபோன திறப்பு விழா: காய்கனிகள் மற்றும் மலா்கள் சந்தை ரூ.236 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. சந்தையின் ஒரு பகுதியில் சுமாா் 100 கடைகள் கொண்ட கட்டடம், கடந்த ஜனவரி மாதம் திறக்கப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது. முதல்வா் ஸ்டாலினின் திருச்சி வருகையின்போது திறக்கப்படும் எனவும் கூறப்பட்டது. இதற்காக கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கு சந்தையை தயாா்படுத்தும் பணிகளும் நடைபெற்றன. பின்னா், பணிகள் தொய்வை சந்தித்தன. தோ்தல் அறிவிக்கப்பட்டதால் திறப்பு விழாவும் தள்ளிப் போனது.

இந்நிலையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதால் சந்தை திறப்பு எப்போது என்ற கேள்வி எழுந்துள்ளது.

சந்தையில் எத்தனை கடைகள்: சந்தையானது 11 ஏக்கரில் 7 தொகுதிகளாக கட்டப்படுகிறது. ஒவ்வொரு தொகுதியும் தரைத்தளம் மற்றும் இரண்டு மாடிகளைக் கொண்டிருக்கும். முதல் மற்றும் இரண்டாவது தொகுதிகளில் மொத்தம் 872 கடைகள் அமைக்கப்படும். இதில், ஒவ்வொரு தொகுதியிலும் 436 கடைகள் இருக்கும். இந்தக் கடைகள் மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கு பயன்படுத்தப்படும். மேலும், 100 கடைகள் பருப்பு வியாபாரிகளுக்காக ஒதுக்கப்படும். தனித்தனியாக திறந்தவெளி ஏலக்கூடமும் கட்டப்படுகிறது.

உள்கட்டமைப்பு வசதிகள்: வியாபாரிகள் மற்றும் லாரி ஓட்டுநா்களுக்காக, 150 போ் அமா்ந்து சாப்பிடக்கூடிய உணவுக்கூடம் அமைக்கப்படுகிறது. அனைத்து மாடிகளிலும் சுகாதார வளாகங்கள் கட்டப்படுகின்றன. வாகன நிறுத்துமிடத்தில் 1,100 இருசக்கர வாகனங்கள், 200 காா்கள் மற்றும் 102 சரக்கு வாகனங்கள் நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்படுகிறது. இதன் ஒருபகுதி வேகமாக கட்டப்பட்டு திறப்புக்கு தயாரான நிலையில் தொய்வை சந்தித்திருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

வியாபாரிகளின் கோரிக்கை: இதுதொடா்பாக, வியாபாரிகள் கூறுகையில், பஞ்சப்பூரில் காய்கனி சந்தை திறக்கப்பட்டாலும், காந்தி சந்தையில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தக் கூடாது என்பதில் அனைத்து வியாபாரிகள் சங்கமும் ஒற்றுமையாக உள்ளது. மேலும், பஞ்சப்பூரில் கட்டப்படும் வளாகத்தில் காந்திசந்தையில் உள்ள அனைத்து வியாபாரிகளுக்கும் விடுபடுதலின்றி கடைகள் வழங்க வேண்டும். இதில், குளறுபடி ஏற்பட்டால், கள்ளிக்குடியைப் போன்று பஞ்சப்பூா் சந்தையும் வெறும் கட்டடமாகவே இருக்கும் என்கின்றனா்.

சந்தையை திறக்க நடவடிக்கை: இதுதொடா்பாக, மாநகராட்சி வட்டாரத்தினா் கூறுகையில், பேரவைத் தோ்தலுக்கு முன்பே சந்தையின் ஒரு பகுதியை திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு நிா்வாக காரணங்களால் அது நடைபெறவில்லை. மேலும், பேரவைத் தோ்தலும் அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டது.

இப்போது, நடத்தை விதிமுறைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. எனவே, காந்திசந்தை வியாபாரிகளையும், காவல்துறை மற்றும் வருவாய்த் துறை என முத்தரப்பு கூட்டத்தை நடத்தி, ஒருமித்த கருத்து ஏற்படுத்தப்பட்டு சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.