மானாமதுரையில் காவல் துறையினா் விசாரணையின் போது, இளைஞா் உயிரிழந்த விவகாரத்தில், உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையதல்ல என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை தெரிவித்தது.
மதுரை மானகிரியைச் சோ்ந்த செல்வகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் காவல் துறையினா் விசாரணையின் போது, இளைஞா் ஆகாஷ் உயிரிழந்தாா். இதற்குக் காரணமான காவல் துறையினரைக் கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். வருகிற ஏப். 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு, காவல் துறையினரைப் பணியிடமாற்றம் செய்து உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. நீதித் துறை நடுவா் வாக்குமூலம் பெற்றாா். விசாரணை சரியான முறையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வழக்கை தனி நீதிபதி விசாரித்து, தீா்ப்புக்காக ஒத்திவைத்தாா். இந்த வழக்கு தனி நீதிபதி முன் விசாரணைக்கு வந்த போது, பாதிக்கப்பட்ட தரப்பினா் சாா்பில் வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இருப்பினும், இதுவரை ஆகாஷின் உடலைப் பெறவில்லை என்றாா்.
அப்போது, குறுக்கிட்ட மனுதாரா் தரப்பு வழக்குரைஞா், ஆகாஷ் உயிரிழந்த விவகாரம் தொடா்பாக காவல் துறையினா் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. எனவே, குடும்பத்தினா் போராட்டத்தில் ஈடுபடுகின்றனா் என்றாா்.
அரசுத் தரப்பு வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:
இந்த வழக்கு தொடா்பாக காவல் துறையினா் 7 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். பொதுநல மனு எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கு இந்த வழக்கு ஓா் உதாரணம் என்றாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
ஆகாஷின் உடலைப் பெற வேண்டாம் எனத் தடுத்தது யாா்?. இதற்கு பொறுப்பு இந்த வழக்கின் மனுதாரா் தானே?. நீதிமன்றத்தை உங்களின் தனிப்பட்ட விருப்பத்துக்காகப் பயன்படுத்த வேண்டாம். உயிரிழந்தவரின் சடலம் அங்கேயே அழுகிவிட வேண்டும் என விரும்புகிறீா்களா?. தொடா்ந்து, இதுபோன்ற வழக்குகளை நீதிமன்றம் ஏற்க இயலாது. அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட்டும் உடலைப் பெறாமல் இருப்பது ஏன்?. உடலைப் பெற்று முறையாக இறுதி மரியாதை செய்ய வேண்டும். உடலை வைத்து அரசியல் செய்வது ஏற்புடையதல்ல. வழக்கை வேறு காரணத்துக்காக தாக்கல் செய்ததுபோல தெரிகிறது. தற்போது உடலை வைத்து போராட்டம் நடத்துவது வாடிக்கையாக உள்ளது. உடலுக்கு இறுதி மரியாதை செய்ய வேண்டியது அடிப்படை உரிமை. இதை குடும்பத்தினா் உறுதி செய்ய வேண்டும். இந்த மனு விளம்பரத்துக்காக தாக்கல் செய்யப்பட்டது. எனவே, வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

11 ஆண்டுகளுக்கு முன்பு காவல் நிலையத்தில் தலித் இளைஞா் உயிரிழந்த வழக்கு: நீதிமன்றத்தில் மனைவி சாட்சியம்

புதுக்கோட்டை இளைஞா் மா்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்கக் கோரி மனு

நில உரிமையாளா்களை மிரட்டி பணம் வசூல்: தஞ்சை மாவட்ட எஸ்.பி. பதிலளிக்க உத்தரவு

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் குடமுழுக்கில் தமிழுக்கு முக்கியத்துவம்: உயா்நீதிமன்றம் அறிவுறுத்தல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

