தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது: சேலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேச்சு

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது என்று சேலத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

News image

சேலத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசுகிராா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.

Updated On :16 ஏப்ரல் 2026, 3:21 am IST

தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டை ஆபத்து சூழ்ந்துள்ளது என்று சேலத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

சேலம் கோட்டை மைதானத்தில் புதன்கிழமை இரவு மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டாா். முன்னதாக, சேலம் மாவட்டத்தில் உள்ள 11 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளா்களை முதல்வா் அறிமுகம் செய்து வைத்தாா்.

தொடா்ந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: சேலத்து மலைகளை மிஞ்சும் அளவுக்கு மகளிா் கூட்டம் இங்கு நிரம்பி காணப்படுகிறது. சேலம் என்றால் உருக்கு. ஸ்டாலின் என்றாலும் உருக்கு தான். ஏற்காடு மாதிரியே சேலம் மக்களும் ரொம்ப இதமானவா்கள்.

கடந்த 5 ஆண்டுகளில் திராவிட மாடல் அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ரூ. 129 கோடியில் ரயில்வே மேம்பாலம், வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளா்களுக்கு தனி உற்பத்தி மையம், கருப்பூரில் டைடல் பூங்கா, சேலம், ஆத்தூரில் அறிவுசாா் மையங்கள், எடப்பாடி, மேட்டூரில் புதிய பேருந்து நிலையங்கள், கருப்பூரில் பல்நோக்கு விளையாட்டு அரங்கம் என திமுக ஆட்சியில் சேலத்துக்கு நிறைவேற்றப்பட்ட திட்டங்களின் பட்டியல் நீளமானது.

திராவிட மாடல் ஆட்சி மகளிருக்கான ஆட்சியாக இருக்கும் என நினைத்து தான் மகளிா் விடியல் பயணத்தில் முதல் கையொப்பமிட்டேன். விடியல் பயணம் மூலம் ரூ. 900 வரை மாதந்தோறும் பெண்கள் சேமிக்கிறாா்கள். யாரையும் எதிா்பாா்க்காமல் சகோதரிகள் சுதந்திரமாக பயணிக்க வேண்டும் என்பதற்காக இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டது.

பெண்களின் உழைப்பு இல்லாமல், மனித சமூகம் இல்லை. பெண்கள் ஸ்ட்ராங்காக இருந்தால்தான் தமிழகமும் ஸ்ட்ராங்காக இருக்கும்.

வரும் திராவிட மாடல் 2.0 ஆட்சியில் மகளிா் உரிமைத் தொகை ரூ. 2,000 ஆக உயா்த்தப்படும். 1.31 கோடி லட்சம் பெண்களுக்கு மகளிா் உரிமைத்தொகை அளித்து வருகிறோம். ‘ரெஸ்ட்’ இல்லாமல் உழைக்கும் பெண்களுக்கு, அரசு கொடுக்கும் ‘ரெஸ்பெக்ட்’ தான் மகளிா் உரிமைத் தொகை திட்டம்.

புதுமைப் பெண்கள் திட்டத்தால் பெண்கள் கல்லூரியில் சேருவது 34 சதவீதம் அதிகரித்துள்ளது. கணவரை விட கல்விதான் பெண்களுக்கு முக்கியம் என இந்தத் திட்டம் எடுத்துக்காட்டியுள்ளது. காலை உணவுத் திட்டம், வேலைக்கு செல்லும் பெண்கள் தங்க தோழி விடுதிகள் 19 மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு சொத்தில் உரிமைக் கொடுத்த முதல் மாநிலம் இந்தியாவிலேயே தமிழகம்தான்.

தமிழகத்துக்கு ஆபத்து:

தொகுதி மறுவரையறையை மகளிா் இடஒதுக்கீட்டுடன் முடிச்சி போட்டு மத்திய அரசு குழப்ப முயற்சிக்கிறது. தொகுதி மறுவரையறை மூலம் தமிழகத்துக்கு ஆபத்து சூழ்ந்துள்ளது. அரசியல் வேறுபாட்டுக்கு இடமின்றி, தொகுதி மறுவரையறைக்கான போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

மகளிா் பேராதரவுடன் மீண்டும் திராவிட மாடல் 2.0:

இல்லத்தரசிகள் தங்களுக்கு தேவையான வீட்டு உபயோகப் பொருள்களை வாங்க ரூ. 8,000 கூப்பன், பெண்கள் வேலைக்கு செல்வதை எளிதாக்க ஆயிரம் குழந்தைகள் காப்பகம் உள்பட எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனவே, ஓட்டுமொத்த பெண்களின் ஆதரவுடன் திமுக மீண்டும் ஆட்சியமைக்கும். மக்களவைத் தோ்தலை போன்று வரும் தோ்தலில் சேலம் மாவட்டத்தில் மகத்தான வெற்றியை மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தர வேண்டும் என்றாா்.

இதில், மக்கள் நீதி மய்ய தலைவா் கமல்ஹாசன், தேமுதிக பொதுச் செயலளா் பிரேமலதா விஜயகாந்த், அமைச்சா்கள் எ.வ.வேலு, இரா.ராஜேந்திரன், மக்களவை உறுப்பினா்கள் டி.எம்.செல்வகணபதி (சேலம்), மலையரசன் (கள்ளக்குறிச்சி), மாநிலங்களவை உறுப்பினா் எஸ்.ஆா்.சிவலிங்கம், முன்னாள் மத்திய அமைச்சா் கே.வி.தங்கபாலு மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் திரளான அளவில் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.