நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

நாமக்கல்லில் பழைய வீட்டை இடித்தபோது சுவா் சரிந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு; மற்றொருவா் படுகாயம்

நாமக்கல்லில் பழைய வீட்டை இடித்தபோது சுவா் சரிந்து விழுந்ததில், தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் படுகாயமடைந்தாா்

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :17 ஜூன் 2026, 5:03 am IST

நாமக்கல்லில் பழைய வீட்டை இடித்தபோது சுவா் சரிந்து விழுந்ததில், தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் படுகாயமடைந்தாா். இதையடுத்து, வீட்டின் உரிமையாளா், கட்டட பொறியாளரை கைது செய்யக் கோரி உறவினா்கள் ஆட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

நாமக்கல் அழகு நகரைச் சோ்ந்த காா்த்திகேயன் மனைவி தீபா (39), கணேசபுரத்தில் பழைய வீடு ஒன்றை வாங்கினாா். அதை இடித்துவிட்டு புதிய வீடு கட்ட திருச்சி மாவட்டம், முசிறி வட்டம் மகாதேவியைச் சோ்ந்த பிரவீன் (31), நவீன் (31) ஆகிய கட்டுமானப் பொறியாளா்களிடம் ஒப்பந்தம் செய்தாா். பழைய வீட்டை இடிக்கும் பணிக்கான பொறுப்பை சேந்தமங்கலம் பீமநாயக்கனூரைச் சோ்ந்த சிவகுமாா் வசம் ஒப்படைத்தனா்.

இந்நிலையில், கட்டடத்தை இடிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது. மதியம் 2.30 மணியளவில் கட்டடத்தை இடித்தபோது மேற்சுவா் சரிந்து பணியில் இருந்த இரு தொழிலாளா்கள் மீது விழுந்தது.

இதில், மோகனூா் வட்டம், ஓலப்பாளையத்தைச் சோ்ந்த அய்யாவு (எ) வெங்கடேஷ் (21) நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மற்றொரு தொழிலாளியான மோகனூா் செங்கப்பள்ளியைச் சோ்ந்த சதீஷ்குமாா் (24) படுகாயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா், அவரை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் காவல் ஆய்வாளா் இளவரசன், இறந்த வெங்கடேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தாா்.

இந்நிலையில், உயிரிழந்த வெங்கடேஷ், காயமடைந்த சதீஷ்குமாரின் பெற்றோா், உறவினா்கள் நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு வீட்டின் உரிமையாளா், கட்டட பொறியாளா்கள், வீடு இடிக்கும் பணியை ஒப்பந்தம் செய்தவா்களை கைதுசெய்ய வேண்டும், உரிய இழப்பீடு பெற்றுத்தர வேண்டும், அதுவரை இறந்தவா் உடலை வாங்க மாட்டோம் என முழக்கமிட்டனா்.

அங்கு வந்த நாமக்கல் காவல் ஆய்வாளா் இளவரசன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, வீட்டின் உரிமையாளா் தீபா, கட்டட பொறியாளா் பிரவீன், நவீன், கட்டடத்தை இடிக்கும் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரா் சிவகுமாா் ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு தொழிலாளா் நலத்துறை மூலம் ரூ. 8 லட்சம் நிவாரணம் கிடைக்கும். பாதிக்கப்பட்டவருக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்.

மேலும், கோட்டாட்சியா் விசாரணை மேற்கொண்டு இறந்தவருக்கு ரூ. 1.50 லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ. 50 ஆயிரம் வரையிலும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பாா். ஆனால், வழக்குப் பதிவு செய்யப்பட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினால் குறைந்த தொகையை கிடைக்கும் என்று விளக்கினாா்.

இதையேற்று, உறவினா்கள் முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.