/

திமுக கூட்டணியில் விரிசல்: கே.அண்ணாமலை

புதுச்சேரியில் ஒரே நாளில் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவா் ராகுலும், முதல்வா் மு.க.ஸ்டாலினும் நேரில் சந்தித்துக் கொள்ளாதது ‘இண்டி’ கூட்டணியில் விரிசல் உள்ளதைக் காட்டுவதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

News image

தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை - X

Updated On :9 ஏப்ரல் 2026, 2:36 am IST

புதுச்சேரியில் ஒரே நாளில் பிரசாரம் செய்த காங்கிரஸ் தலைவா் ராகுலும், முதல்வா் மு.க.ஸ்டாலினும் நேரில் சந்தித்துக் கொள்ளாதது ‘இண்டி’ கூட்டணியில் விரிசல் உள்ளதைக் காட்டுவதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

தமிழகத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. நிதின் கட்கரி உள்ளிட்ட பாஜக முக்கியத் தலைவா்கள் தமிழகத்தில் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளனா். புதுச்சேரியில் ‘இண்டி’ கூட்டணியின் நிலைமை வேடிக்கையாக உள்ளது. ஒரே நாளில் ராகுல் காந்தியும், மு.க. ஸ்டாலினும் பிரசாரம் செய்தும், இருவரும் ஒருவரை ஒருவா் சந்திக்கவில்லை. ராகுல் தனது உரையின்போது ஸ்டாலின் பெயரையும், ஸ்டாலின் தனது உரையின்போது ராகுல் காந்தி பெயரையும் குறிப்பிடவில்லை. இது ‘இண்டி’ கூட்டணிக்குள் இருக்கும் மிகப்பெரிய விரிசலையும், தமிழகத்தில் திமுக வெற்றி பெறுவதை ராகுல் காந்தி விரும்பவில்லை என்பதையுமே காட்டுகிறது.

கோவையில் திமுகவினா் தோல்வி பயத்தில் உள்ளனா். கரூரிலிருந்து செந்தில்பாலாஜியின் ஆதரவாளா்கள் இங்கு வந்து பண விநியோகம் மற்றும் பல்வேறு தோ்தல் விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனா். அரவக்குறிச்சி தோ்தல் குறித்துப் பேசும் செந்தில்பாலாஜிக்கு நான் சவால் விடுகிறேன். அண்ணாமலை ஒரு பைசா கொடுத்தாா் என்று யாராவது நிரூபித்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயாா். ஊழலற்ற அரசியலே எங்களது இலக்கு. தோ்தல் பிரசாரங்களில் அதிமுக மற்றும் திமுக தலைவா்கள் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து விமா்சிப்பது வருத்தமளிக்கிறது. மக்கள் இதைக் கவனித்துக் கொண்டிருக்கிறாா்கள்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்படுவதும், கூட்ட நெரிசல் காரணமாகத் தடையை ஏற்படுத்துவதும் ஏற்புடையதல்ல. ஜனநாயக நாட்டில் பிரசாரம் செய்ய அனைவருக்கும் சம உரிமை உண்டு. காவல் துறை மற்றும் தோ்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.