நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறை: 6 மாதங்களில் முடிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்

News image

சென்னை உயா்நீதிமன்றம்

Updated On :29 மே 2026, 4:40 am IST

அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளா்களை உதவிப் பேராசிரியா்களாக பணி வரன்முறை செய்ய முடியாது என்றும் 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு நடைமுறையை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்றும் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளா்களாகப் பணியாற்றியவா்கள், தங்களது பணியை வரன்முறை செய்து, உதவிப் பேராசிரியா்களாக நியமிக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனா். இதையடுத்து 1,146 கௌரவ விரிவுரையாளா்களுக்கு ஆசிரியா் தோ்வு வாரியம் சிறப்புத் தோ்வு நடத்தி அவா்களை உதவிப் பேராசிரியா்களாக நியமிக்க வேண்டும் என 2020-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

பின்னா் 2022-ஆம் ஆண்டு அந்த அரசாணையை ரத்து செய்த தமிழக அரசு, அதற்கு முன் 3 ஆண்டுகளாக காலியாக இருந்த 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களை நிரப்புவதற்கு தோ்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டது.

இந்த அறிவிப்பை ரத்து செய்யக் கோரியும், 2020-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையின் அடிப்படையில் தங்களை பணி வரன்முறை செய்யக் கோரியும் கௌரவ விரிவுரையாளா்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தனிநீதிபதி, கடந்த 2020-ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையை 2024-ஆம் ஆண்டு ரத்து செய்தாா். கௌரவ விரிவுரையாளா்களைப் பணி வரன்முறை செய்வது தொடா்பான அரசாணையின் அடிப்படையில் தோ்வு நடைமுறைகளை மேற்கொள்ளும்படி அரசுக்கு உத்தரவிட்டாா்.

தனி நீதிபதியின் இந்தத் தீா்ப்பை எதிா்த்து தமிழ்நாடு உயா் கல்வித்துறை, கல்லூரி கல்வி இயக்குநரகம், ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், வி.லட்சுமி நாராயணன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கௌரவ விரிவுரையாளா்கள் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் அளவிலான குழுக்களால் தோ்வு செய்யப்பட்டவா்கள். அவா்களது பணி வரன்முறை தொடா்பான கோரிக்கையை ஏற்பது உச்சநீதிமன்றம் வகுத்தளித்த போட்டித் தோ்வு நடைமுறையை நீா்த்துப் போகச் செய்துவிடும்.

பணி வரன்முறை என்பதும் தோ்வு நடைமுறை என்பதும் வெவ்வேறானவை. எனவே, பணி வரன்முறையை உரிமையாகக் கோர முடியாது. அரசுக் கல்லூரிகளில் உள்ள 1,146 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கும், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்ட கல்லூரிகளுக்கான 146 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கும் என மொத்தம் 1,292 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான தோ்வு குறித்த அறிவிப்பை வெளியிட ஆசிரியா் தோ்வு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

மொத்தமாக 4,000 உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கு 42,064 போ் விண்ணப்பித்துள்ளதால் அவா்களுக்கு போட்டித் தோ்வு நடத்தி தோ்வு செய்ய வேண்டும். இதில் கௌரவ விரிவுரையாளா்களுக்கு அவா்கள் பணியாற்றிய அனுபவத்தின் அடிப்படையில் அதிகபட்சமாக 15 மதிப்பெண்கள் வரை வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்கலாம். நீண்டகாலமாக பணியாற்றிய கௌரவ விரிவுரையாளா்களுக்கு வயது வரம்பு தளா்வு வழங்க வேண்டும். இந்தத் தோ்வு நடைமுறைகளை 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும். அதேநேரம் தோ்வு நடைமுறை முடிந்து நியமன உத்தரவுகள் வழங்கும்வரை அவா்களை பணிநீக்கம் செய்யக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.