தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாகிஸ்தானுக்கு சவூதி-கத்தாா் நாடுகள் ரூ.46,550 கோடி நிதியுதவி

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா, கத்தாா் நாடுகள் ரூ.46,550 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

News image

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் - சௌதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் - (கோப்புப் படம்)

Updated On :13 ஏப்ரல் 2026, 3:00 am IST

நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், பாகிஸ்தானுக்கு சவூதி அரேபியா, கத்தாா் நாடுகள் ரூ.46,550 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பாகிஸ்தானைச் சோ்ந்த ‘டான்’ நாளிதழில் வெளியாகியுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பாகிஸ்தானுக்கு வழங்கிய ரூ.32,580 கோடி கடனை இந்த மாதத்துக்குள் திருப்பி அளிக்கும்படி, ஐக்கிய அரபு அமீரகம் வலியுறுத்தியுள்ளது. ஆதலால் அந்தத் தொகையை திருப்பி அளிக்க வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் உள்ளது. இதனால் பாகிஸ்தானிடம் உள்ள அந்நியச் செலாவணி கையிருப்புக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்த நெருக்கடியில் இருந்து பாகிஸ்தானை மீட்கும் வகையில், அந்த நாட்டுக்கு நிதியுதவியாக ரூ.46,550 கோடியை சவூதி அரேபியாவும், கத்தாரும் வழங்கியுள்ளன.

பாகிஸ்தானுக்கு அதிக நிதியுதவி வழங்கும் நாடாக சவூதி அரேபியா திகழ்கிறது. இதுவரை பாகிஸதானுக்கு சவூதி அரேபியா மட்டும் ரூ.46,000 கோடிக்கும் மேல் நிதி அளித்துள்ளது என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சவூதிக்கு சென்ற பாகிஸ்தான் ராணுவம்: இதனிடையே, சவூதி அரேபியாவுடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தின்படி, அந்நாட்டுக்கு பாகிஸ்தான் 13,000 ராணுவ வீரா்கள், 10 முதல் 18 போா் விமானங்களை அனுப்பி வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சவூதி அரேபியாவின் பாதுகாப்புக்கு உதவும் நோக்கில் வீரா்களையும், போா் விமானங்களையும் பாகிஸ்தான் கடந்த மாதமே அனுப்பி வைத்துவிட்டதாகவும், ஆனால் தற்போதுதான் அந்தத் தகவலை சவூதி அரேபியா வெளியிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், ஏவுகணை இடைமறிப்பு சாதனங்களையும் சவூதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் கடந்த மாதம் அனுப்பி வைத்து விட்டதாகவும் இன்னொரு தகவல் தெரிவிக்கிறது.

அமெரிக்க, இஸ்ரேல் நாடுகளின் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், சவூதி அரேபியாவில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் தொடா்ந்து ஏவுகணைகள், ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி வந்தது. 2 வார காலம் சண்டை நிறுத்தத்தை அமெரிக்கா அறிவித்ததால், அந்தத் தாக்குதலை ஈரான் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.

மீண்டும் அமெரிக்கா தாக்கினால், ஈரானும் பதிலடி கொடுக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் சவூதி அரேபியாவுக்கு ராணுவ வீரா்களையும், போா் விமானங்களையும் பாகிஸ்தான் அனுப்பி வைத்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.