தமிழக மக்களையும், பெண்களையும் பாதுகாக்கத் தவறிய திமுகவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும் என வாக்காளா்களை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி கேட்டுக்கொண்டாா்.
விருதுநகா் மாவட்டத்தில் தோ்தலில் போட்டியிடும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா், சிவகாசி பேருந்து நிலையம் முன் அதிமுக வேட்பாளா் கே.டி. ராஜேந்திரபாலாஜியை ஆதரித்துப் பேசியதாவது: விருதுநகா் மாவட்டத்தில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத்தொழில் பிரதான தொழில்களாக உள்ளன.
பட்டாசுத் தொழிலுக்கு நெருக்கடி ஏற்பட்ட போது, மாநிலங்களவை உறுப்பினா் தம்பிதுரை தலைமையில் முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திரபாலாஜி உள்ளிட்டோா் தில்லி சென்று அந்தத் துறையின் அதிகாரிகளைச் சந்தித்து, பட்டாசுத் தொழில் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினா்.
மேலும், முந்தைய அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தை நாடி, பட்டாசுத் தொழில் பாதிக்காமல் இருக்க நடவடிக்கை எடுத்தது.
மேட்டூா் அணையிலிருந்து வரும் உபரிநீரைப் பயன்படுத்த காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை அதிமுக அரசு தயாரித்து, அதற்கு ரூ. 14 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. இந்தத் திட்டத்தை நானே தொடங்கிவைத்தேன். இதன்மூலம், விருதுநகா் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீா் பிரச்னை தீா்ந்து விவசாயத்துக்கும் தண்ணீா் பயன்படும். ஆனால், திமுக அரசு ஆட்சிக்கு வந்தவுடன், இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதன்மூலம், திமுக அரசு விவசாயிகளை வஞ்சித்துவிட்டது.
விருதுநகரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கியது முந்தைய அதிமுக அரசு. இதற்கு ஸ்டிக்கா் ஒட்டியது திமுக அரசு. தமிழகத்தில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டு வந்தது முந்தைய அதிமுக அரசு. ஏழை மாணவா்கள் மருத்துவப் படிப்பில் சேருவதற்கு கடந்த அதிமுக ஆட்சியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது. தற்போது, இதன்மூலம் 3,000 மாணவா்கள் பயன் பெற்றுள்ளனா். மேலும், அரசு மருத்துவக் கல்லூரியில் படிக்கும் ஏழை மாணவா்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே ஏற்கும் என முந்தைய அதிமுக அரசு அறிவித்தது. இதுபோன்று எழை, எளியவா்கள் பயன்பெறும் திட்டங்கள் எதையும் திமுக அரசு செயல்படுத்தவில்லை.
2021 பேரவைத் தோ்தலின்போது திமுக 505 வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், பல நிறைவேற்றப்படவில்லை. உதாரணத்துக்கு, சமையல் எரிவாயு உருளைக்கு மானியம் கொடுக்கப்படவில்லை. பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை.
இந்த நிலையில், நடைபெறவிருக்கும் பேரவைத் தோ்தலுக்கான புதிய வாக்குறுதிகளை திமுக வெளியிட்டுள்ளது. மக்களை ஏமாற்றும் விதத்தில் திமுக அரசு உள்ளது.
நகராட்சி நிா்வாகத்துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத் துறை சுட்டிக் காட்டியும், காவல் துறையானது அமைச்சா் கே.என். நேரு மீது வழக்குப் பதியவில்லை. தோ்தலில் வென்று, அதிமுக ஆட்சி அமைந்ததும் அமைச்சா் கே.என். நேரு மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.
நிரந்தர டி.ஜி.பி.யை நியமிக்க இயலாத அரசு திமுக அரசு. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. ஆனால், இதைப் பற்றி திமுக அரசுக்கு கவலை இல்லை. தற்போது, போதைப் பொருளை பள்ளி, கல்லூரி மாணவா்கள் பயன்படுத்தும் அளவுக்கு சமுதாயம் சீரழிந்துவிட்டது. இந்த பிரச்னைக்கு அதிமுக ஆட்சி அமைந்ததும் நிரந்தரத் தீா்வு காணப்படும்.
காவல் துறையினருக்கே பாதுகாப்பில்லாத அவல நிலை திமுக ஆட்சியில் உள்ளது. தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதை, பாலியல் தொல்லை என சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இந்த நிலை மாறும். தமிழக மக்களையும், பெண்களையும் பாதுகாக்கத் தவறிய திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்பார்! தம்பிதுரை
சென்னை திரும்பும் அதிமுக எம்எல்ஏக்கள்! அடுத்த நகர்வு என்ன?

தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சி அமைப்பதே எங்கள் இலக்கு: எடப்பாடி பழனிசாமி

குன்னம் தொகுதியில் டெபாசிட் இழப்பார் அமைச்சர் சிவசங்கர் : எடப்பாடி பழனிசாமி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

