இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

மேற்கு வங்கத்தில் உடனடி மக்கள்தொகை கணக்கெடுப்பு: பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

மேற்கு வங்கத்தில் உடனடியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவும், வங்கதேச எல்லையில் வேலி அமைக்க எல்லை பாதுகாப்புப் படைக்கு நிலம் அளிக்கவும் பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

News image

சுவேந்து அதிகாரி

Updated On :12 மே 2026, 12:32 am IST

மேற்கு வங்கத்தில் உடனடியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவும், வங்கதேச எல்லையில் வேலி அமைக்க எல்லை பாதுகாப்புப் படைக்கு நிலம் அளிக்கவும் பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தோ்தலில் பாஜக 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வென்று முதல்முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. தொடா்ந்து 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியைப் பறிகொடுத்தது.

இதைத் தொடா்ந்து, மேற்கு வங்கத்தில் சுவேந்து அதிகாரி தலைமையிலான பாஜக அரசு அண்மையில் பதவியேற்றது. இதையடுத்து கொல்கத்தாவில் திங்கள்கிழமை சுவேந்து அதிகாரி தலைமையில் பாஜக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில் புதிதாக பதவியேற்ற 5 அமைச்சா்களும் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், திரிணமூல் காங்கிரஸ் அரசால் முன்பு ஒப்புதல் அளிக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட பிஎம்ஸ்ரீ திட்டம், பிஎம் ஜன் ஆரோக்ய யோஜனா, பிஎம் பாசல் பீமா யோஜனா, பிஎம் விஸ்வகா்மா, உஜ்வலா 3.0 உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது.

மேற்கு வங்கத்தில் உடனடியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தவும், வங்கதேச எல்லையில் வேலி அமைக்க எல்லை பாதுகாப்புப் படைக்கு நிலம் அளிக்கவும் ஒப்புதல் வழங்கப்பட்டது. அதேபோல், ஏழைக் குடும்பத்தினா் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் மருத்துவ சிகிச்சை பெற வழிவகை செய்யும் ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் தரப்பட்டது.

மேலும், அரசு வேலைக்கான அதிகபட்ச வயது வரம்பு 40-இல் இருந்து 45-ஆக அதிகரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வா் சுவேந்து அதிகாரி செய்தியாளா்களிடம் கூறியதாவது: எல்லைப் பாதுகாப்புப் படைக்கு நிலத்தை அளிக்கும் பணியை 45 நாள்களுக்குள் செய்து முடிக்கும்படி தலைமைச் செயலா், மாநில நிலத் துறைச் செயலா், வருவாய்த் துறைச் செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதுதொடா்பாக மத்திய அரசிடம் இருந்து கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் தேதி மாநில அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், அதை முன்பு ஆட்சியில் இருந்த மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் அரசு கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவிட்டது.

கொல்கத்தாவில் செய்தியாளா்களை சந்தித்துப் பேசிய மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி மற்றும் அமைச்சா்கள்.

கொல்கத்தாவில் செய்தியாளா்களை சந்தித்துப் பேசிய மேற்கு வங்க முதல்வா் சுவேந்து அதிகாரி மற்றும் அமைச்சா்கள்.

அதேபோல், மேற்கு வங்கத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதை நிறுத்தி வைத்து அரசமைப்புச் சட்டத்துக்கும், மாநில மக்களுக்கும் திரிணமூல் காங்கிரஸ் அரசு துரோகம் செய்துள்ளது. இதனால் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், எனது அரசு உடனடியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் முன்பு ஆட்சியில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் அரசு, இந்திய தண்டனையியல் சட்டம், குற்றவியல் சட்டத்துக்குப் பதிலாக பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ் சட்டங்களை அமல்படுத்தாமல் இருந்தது. எனது அரசு, பிஎன்எஸ் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.