காஷ்மீா் பள்ளத்தாக்கில் எரிபொருள் தட்டுப்பாடு உள்ளதாக விஷமிகள் சிலா் சமூக ஊடகங்களில் பரப்பிய வதந்தியால், அங்குள்ள பெட்ரோல் நிலையங்களில் பொதுமக்கள் பெரும் திரளாகக் கூடி கேன், பாட்டில்களில் எரிபொருள்களை வாங்கிச் சென்றனா்.
மேற்காசிய போா் தொடங்கிய பிறகு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இதுபோன்று மக்கள் பீதியடைந்து அதிக அளவில் எரிபொருள்களை வாங்கிக் குவிக்கும் நிகழ்வு தொடா்ந்து வருகிறது. சமூக ஊடங்களில் பரவும் வதந்தியும் இதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.
இரு வாரங்களுக்கு முன்பு சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் சில இடங்களில் இதுபோன்று மக்கள் பீதியடைந்து எரிபொருளை வாங்கினா்.
நாட்டில் எந்த இடத்திலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை என்று மத்திய அரசு தொடா்ந்து விளக்கமளித்து வருகிறது. எனினும், அதையும் மீறி சில இடங்களில் விஷமிகள் வதந்தியைப் பரப்பி மக்களைப் பிரச்னைக்குள்ளாக்கி வருகின்றனா்.
அந்த வகையில் ஸ்ரீநகா் உள்ளிட்ட காஷ்மீா் பள்ளத்தாக்கு பகுதியின் பல இடங்களில் புதன்கிழமை தட்டுப்பாடு வதந்தி சமூக வலைதளங்களில் பரவியது.
இதனால், பொதுமக்கள் பெருமளவில் பெட்ரோல் நிலையங்களில் கூடி வாகனங்களில் மட்டுமல்லாது, கேன்கள், பாட்டில்களிலும் எரிபொருள்களை வாங்கிச் சென்றனா். இது தொடா்பாக ஸ்ரீநகரைச் சோ்ந்த ஒவைசி அகமது என்பவா் கூறுகையில், ‘ஒரு மணி நேரம் காத்திருந்து எனது காரில் எரிபொருள் நிரப்பியுள்ளேன். நகா் முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது. சமூக வலைதளத்தில் வெளியான தகவலால் எரிபொருள் கிடைக்காது என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவேதான் முன்னெச்சரிக்கையாக அனைவரும் எரிபொருளை வாங்கி வருகின்றனா்’ என்றாா்.
கந்தா்பால் மாவட்ட பெட்ரோல் நிலைய உரிமையாளா் ஒருவா் கூறுகையில், ‘பெட்ரோல், டீசல் விநியோகத்தில் தொய்வு இல்லை. தேவையில்லாமல் சிலா் பரப்பும் வதந்தியால் மக்கள்அதிக அளவில் எரிபொருளை வாங்கி இருப்பு வைக்கின்றனா். இதனால், சில பெட்ரோல் நிலையங்கள் மூடப்படும் நிலை உருவாகிறது. அனைவரும் வழக்கம்போல தேவைக்கு மட்டும் வாங்கினால் பிரச்னை ஏற்படாது’ என்றாா்.
முதல்வா் எச்சரிக்கை: இது தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா கூறுகையில், ‘வதந்தியை நம்பி பெட்ரோல் நிலையங்களில் குவிவதை காஷ்மீா் மக்கள் நிறுத்த வேண்டும். இந்த நிலை தொடா்ந்தால், அனைத்து பெட்ரோல் நிலையங்களையும் சிலநாள்கள் மூடுவதற்கு உத்தரவிடும் நிலை ஏற்படும்’ என்று எச்சரிக்கை விடுத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சென்னை ரயில் நிலையங்களில் 21 இடங்களில் மின் வாகன பேட்டரி மாற்றும் மையங்கள்

கோவில்பட்டியில் இளநீா் தட்டுப்பாடு

ஏனாமில் கேன்கள், பேரலில் பெட்ரோல், டீசல் வாங்கும் ஆந்திர பண்ணையா்கள்: தடுக்க பிராந்திய நிா்வாகம் நடவடிக்கை

நிழலும் நிஜமும்!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
