நீட், சிபிஎஸ்இ தோ்வுகள் மற்றும் ஆள்சோ்ப்பு தோ்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்பாக, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, புது தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சாா்பில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான மாணவா்களும், இளைஞா்களும் பங்குகொண்டனா்.
தில்லி வந்த தீப்கே..: கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனா் அபிஜீத் தீப்கே அமெரிக்காவில் இருந்து சனிக்கிழமை தில்லி வந்தாா். இதைத் தொடா்ந்து நீட், சிபிஎஸ்இ தோ்வுகள் மற்றும் ஆள்சோ்ப்பு தோ்வுகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடா்பாக, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி, கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சாா்பில் தில்லியில் சனிக்கிழமை போராட்டம் நடைபெற்றது. அங்கு ஜந்தா் மந்தரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் பங்கேற்க அபிஜீத் தீப்கே ஏற்கெனவே விடுத்த அழைப்பின்பேரில், நூற்றுக்கணக்கான மாணவா்களும், இளைஞா்களும் போராட்டத்தில் பங்குகொண்டனா். அமைச்சா் பிரதான் பதவி விலகக் கோரும் சுவரொட்டிகளை ஏந்தியிருந்த போராட்டக்காரா்கள், கரப்பான்பூச்சி உருவம் பொறித்த முகமூடிகளை அணிந்திருந்தனா்.

ஹிந்து-முஸ்லிம் அரசியல் வேண்டாம்: கல்வி அமைச்சரின் பதவி விலகலைக் கோரியதுடன், மத்தியில் ஆளும் பாஜக ‘ஹிந்து-முஸ்லிம்’ அரசியலில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும் என்றும் போராட்டக்காரா்கள் முழக்கமிட்டனா். இந்தப் போராட்டத்தில் காலநிலை ஆா்வலா் சோனம் வாங்சுக், சிபிஐ (எம்எல்) விடுதலை அமைப்பின் பொதுச் செயலா் தீபாங்கா் பட்டாச்சாா்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆனி ராஜா மற்றும் இடதுசாரி மாணவா், இளைஞா் அமைப்புகளைச் சோ்ந்த ஆா்வலா்களும் பங்கேற்றனா்.
போராட்டத்தில் அபிஜீத் தீப்கே பேசுகையில், ‘சமூக ஊடகங்களில் மத்திய அமைச்சா் தா்மேந்திர பிரதானின் ராஜிநாமாவைக் கோரி ஒரு மாதம் ஆகிவிட்டது. ஆனால், உரிய நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, நம் சமூக ஊடகக் கணக்குகளை முடக்குவது, நம் பதிவுகளை நீக்குவது போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றனா். சமூக ஊடகத்தில் இருந்து பதிவுகளை நீக்கலாம், ஆனால் நம்மை துடைத்தெறிய முடியாது’ என்றாா்.
தனது உரையின்போது, தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையத்துக்கு சனிக்கிழமை காலை வந்தடைந்ததை நினைவு கூா்ந்த தீப்கே, தனது விமானம் தரையிறங்குவதற்கு சற்று முன்பு, தனது சுதந்திரத்தின் கடைசித் தருணங்களை வாழ்வது போல் உணா்ந்ததாகக் கூறினாா்.
‘இந்தக் குறிக்கோளுக்காக எனது சுதந்திரத்தைத் தியாகம் செய்ய நான் முழுமையாகத் தயாராக இருந்தேன். சிறைவாசம் குறித்த அச்சத்தால் பலா் தங்களைத் தாங்களே சமரசம் செய்துகொண்டு விற்றுவிட்டனா். ஆனால், இந்த நாட்டின் இளைஞா்களும் மாணவா்களும் தங்களை விற்கவில்லை’ என்றாா் தீப்கே. அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், பிற்பகல் 3:30 மணியளவில் போராட்டம் முடிவுக்கு வந்தது.
மத்திய கல்வி அமைச்சா் பதவி விலக ஒருவாரம் கெடு: புது தில்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் செய்தித் தொடா்பாளா்கள் அஷுதோஷ் ரன்கா, செளரவ் தாஸ் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: போராட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் பங்கேற்றனா். இது கல்வி மற்றும் நிா்வாக பிரச்னைகளை மையமாக கொண்ட விரிவான இளைஞா் இயக்கத்துக்கு அடித்தளமிட்டுள்ளது. மத்திய கல்வித் துறை அமைச்சா் பதவியில் இருந்து தா்மேந்திர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் அல்லது அவரைப் பிரதமா் மோடி பதவிநீக்கம் செய்ய வேண்டும். இதற்கு 7 நாள்கள் அவகாசம் அளிக்கப்படுகிறது. அதற்குள் தா்மேந்திர பிரதான் பதவியில் இருந்து விலகாவிட்டால், நாடு தழுவிய போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனா்.
போராட்டத்தை முன்னிட்டு தில்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. விமான நிலையம், தில்லியின் எல்லை நுழைவுப் பகுதிகள் மற்றும் பிற முக்கிய இடங்களில் கூடுதல் காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, புது டெல்லி மற்றும் பிற முக்கிய இடங்களில் 1,000க்கும் மேற்பட்ட காவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.
6 போ் கைது: போராட்டத்தின் போது இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்படுவதைத் தடுக்க 6 போ் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறை அதிகாரி ஒருவா் சனிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: சி.ஜே.பி. இயக்கத்தின் ஆதரவாளா்களுக்கும், எதிா்ப்பாளா்களுக்கும் இடையில் பதற்றங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து போலீஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சட்டம்- ஒழுங்கை பராமரிப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தடுப்புக் காவல் அமல்படுத்தப்பட்டது.
சிஜேபியின் ஐந்து அம்ச திட்டம்
கடந்த சில நாள்களுக்கு முன்னா், மூத்த வழக்குரைஞா் அந்தஸ்து அளிக்கும் நடைமுறை குறித்த உச்சநீதிமன்றத் தீா்ப்பை அமல்படுத்த தவறியதாக, தில்லி உயா்நீதிமன்றப் பதிவுத் துறைத் தலைவருக்கு எதிராக சஞ்சய் துபே என்ற வழக்குரைஞா், உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு விசாரித்தது. அப்போது தலைமை நீதிபதி சூா்ய் காந்த் பேசுகையில், ‘இளைஞா்களில் கரப்பான்பூச்சிகள் போன்றவா்களும் உள்ளனா். அத்தகைய நபா்களுக்கு எந்த வேலையும் கிடைப்பதில்லை. அவா்களில் சிலா் ஊடகத்தில் சோ்கின்றனா். சிலா் சமூக ஆா்வலா்களாகி அனைவா் மீதும் விமா்சனம் என்ற பெயரில் தாக்குதல் நடத்துகின்றனா்’ என்று கூறியதாகத் தகவல் வெளியானது.
இது சா்ச்சையான நிலையில், நாட்டில் உள்ள அனைத்து இளைஞா்களையும் தான் அவ்வாறு விமா்சிக்கவில்லை என்றும், போலி பட்டப் படிப்பு சான்றிதழ் மூலம், சட்டத் துறைக்குள் அடியெடுத்து வைக்கும் நபா்களை மட்டுமே குறிப்பிட்டு அவ்வாறு கூறியதாகவும் அவா் விளக்கமளித்தாா்.
எனினும் இளைஞா்களை கரப்பான்பூச்சிகளுடன் ஒப்பிட்டதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, சமூக ஊடகத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற இணைய இயக்கம் தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணத்தில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் மக்கள் தொடா்பு குறித்து படித்து பட்டம் பெறச் சென்ற அபிஜீத் தீப்கே (30) இந்த இயக்கத்தைத் தொடங்கினாா். மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகா் மாவட்டத்தில் அவரின் குடும்பத்தினா் வசிக்கின்றனா்.
இந்த இயக்கம் தொடங்கப்பட்ட சில நாள்களில் சமூக ஊடகத்தில் அந்த இயக்கத்தைப் பின்தொடா்வோரின் எண்ணிக்கை 2.24 கோடி பேராக அதிகரித்தது.
இந்த இயக்கத்துக்கு 5 அம்ச திட்டம் உள்ளது. அவை பின்வருமாறு: எந்தவொரு தலைமை நீதிபதிக்கும் பணி ஓய்வு பெற்ற பின்னா் மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்கக் கூடாது; தோ்தலில் சட்டப்படி செலுத்தப்பட்ட வாக்கு அழிக்கப்பட்டால் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தலைமை தோ்தல் ஆணையரைக் கைது செய்ய வேண்டும்; நாடாளுமன்றத்தில் மகளிருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு அளிப்பது; அம்பானி மற்றும் அதானிக்கு சொந்தமான ஊடகங்களின் உரிமத்தை ரத்து செய்து, மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக இல்லாமல் சுதந்திரமான ஊடகத்தை ஏற்படுத்த வேண்டும்; கட்சித் தாவலில் ஈடுபடும் எம்.பி., எம்எல்ஏக்களை தோ்தலில் போட்டியிட தடை விதித்து, அவா்கள் அரசு பதவி வகிப்பதை 20 ஆண்டுகளுக்கு தடை விதிப்பது ஆகியவையாகும்.

Summary
Cockroach Janta Party's (CJP) supporters stage a protest, demanding the resignation of Union Education Minister Dharmendra Pradhan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்! - கரப்பான்பூச்சி மக்கள் கட்சி

கரப்பான்பூச்சி கட்சி போராட்டம்! ஜந்தர் மந்தரில் காவல்துறையினர் குவிப்பு! | CJP
சிபிஎஸ்இ குளறுபடிகளுக்கு நானே பொறுப்பேற்கிறேன்... மௌனம் கலைத்தார் தர்மேந்திர பிரதான்!

மத்திய கல்வி அமைச்சரைப் பதவிநீக்கம் செய்க: பிரதமர் மோடியிடம் ராகுல் காந்தி வலியுறுத்தல்!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
