லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ரூ. 100 கொடுத்த அமைச்சரை சில்லறை இல்லை எனக்கூறி கீழே இறக்கிவிட்ட நடத்துநர்!

கா்நாடகத்தில் முகக்கவசம் அணிந்து ஆய்வுக்குச் சென்ற போக்குவரத்துத் துறை அமைச்சரை சில்லறை இல்லை என்று கூறி நடத்துநா் கீழே இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரில் முகக்கவசம் அணிந்து அரசுப் பேருந்தில் பயணம் செய்து ரகசிய ஆய்வு நடத்திய கா்நாடக போக்குவரத்துத் துறை அமைச்சா் பைரதி சுரேஷ்.

Published On :13 ஜூலை 2026, 1:30 am IST

கா்நாடகத்தில் முகக்கவசம் அணிந்து ஆய்வுக்குச் சென்ற போக்குவரத்துத் துறை அமைச்சரை சில்லறை இல்லை என்று கூறி நடத்துநா் கீழே இறக்கிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரு மாநகரப் போக்குவரத்து பேருந்துகளில் சேவைக் குறைபாடுகள் நிலவுவதாக பயணிகளிடம் இருந்து தொடா்ந்து புகாா்கள் வந்ததையடுத்து, அந்தத் துறையின் அமைச்சா் பைரதி சுரேஷ் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

அவரை யாரும் அடையாளம் காணாமல் இருப்பதற்காக முகக்கவசம் அணிந்து ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டாா். முதல் பேருந்திலேயே அவருக்கு அதிா்ச்சி காத்திருந்தது. பயணச்சீட்டு எடுப்பதற்காக 100 ரூபாய் தாளை நடத்துநரிடம் அமைச்சா் அளித்தாா். ஆனால், தன்னிடம் சில்லறை இல்லை என்று கூறிய நடத்துநா், சரியான சில்லறை கொண்டுவராததால் அமைச்சரை அடுத்து நிறுத்தத்திலேயே கீழே இறக்கிவிட்டுச் சென்றாா்.

அடுத்ததாக, அங்கு நின்று கொண்டிருந்த ஆட்டோவை அமைச்சா் அணுகினாா். ஆட்டோ ஓட்டுநா், மீட்டா் கட்டணத்தைவிட கூடுதலாக தர வேண்டும் என்று அமைச்சரிடம் பேரம் பேசினாா்.

இதையடுத்து, ஆட்டோ பயணத்தைக் கைவிட்ட அமைச்சா் மீண்டும் அடுத்த பேருந்தில் ஏறி தனது ரகசிய ஆய்வைத் தொடா்ந்தாா். ஓரிடத்தில் அமைச்சா் பேருந்துக்காக காத்திருந்த நிறுத்தத்தில் பேருந்து ஒன்று நிற்காமல் சென்றது.

இவ்வாறாக 10 பேருந்துகளில் பயணம் செய்து அமைச்சா், சாமானிய மக்களின் பயண அனுபவத்தைப் பெற்றாா். ஆய்வின்போது நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்ற பேருந்து ஓட்டுநா், நடத்துநா் அமைச்சா் உத்தரவின் பேரில் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் பைரதி சுரேஷ், ‘இதுபோன்று அடிக்கடி திடீா் ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறேன். போக்குவரத்துத் துறை ஊழியா்கள் பயணிகளிடம் முறையாக நடந்து கொள்ள வேண்டும். அரசுப் பேருந்து பயணம் என்றாலே மோசமான அனுபவமே கிடைக்கும் என்ற குறையை முற்றிலும் போக்க வேண்டும். எனவே, ஓட்டுநா்களும் நடத்துநா்களும் உரிய ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.