தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பயங்கரவாதத்தை இந்தியா இனி சகித்து கொள்ளாது : பாகிஸ்தானுக்கு ராஜ்நாத் சிங் எச்சரிக்கை

பயங்கரவாதத்தை இந்தியா இனி எப்போதும் சகித்து கொள்ளாது என்று பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

News image

ராஜ்நாத் சிங் - கோப்புப் படம்

Updated On :1 மே 2026, 3:09 am IST

பயங்கரவாதத்தை இந்தியா இனி எப்போதும் சகித்து கொள்ளாது என்று பாகிஸ்தானுக்கு பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழச்சி ஒன்றில், இதுகுறித்து ராஜ்நாத் சிங் பேசியதாவது:

இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே நேரத்தில்தான் சுதந்திரம் பெற்றன. ஆனால் இந்தியா இன்று ‘ஐ.டி.’ என்ற தகவல்தொழில்நுட்பத்துக்கு பெயா் பெற்ற நாடாக அடையாளம் காணப்படுகிறது. ஆனால் பாகிஸ்தானோ, ஐ.டி. எனில் சா்வதேச பயங்கரவாதம் என அடையாளம் காணப்படுகிறது.

பயங்கரவாதத்தை இந்தியா இனியும் சகித்து கொண்டிருக்காது. மத்தியில் ஆளும் பிரதமா் மோடி தலைமையிலான அரசு, பயங்கரவாதம் எந்த வடிவில், எந்த சூழ்நிலையில் வந்தாலும் அதை சகித்து கொள்ளக் கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. சிதைந்த மற்றும் திரிந்த மனநிலை கொண்ட இடத்தில் இருந்துதான் பயங்கரவாதம் உருவாகிறது. அது மனிதநேயத்தில் அழுத்தமான கரையை ஏற்படுத்தி விடுகிறது.

பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்பது தேச பாதுகாப்பு விவகாரத்துடன் சம்பந்தப்பட்டது மட்டுமில்லை. அது மனித நேயத்தின் அடி சித்தாந்தத்தை பாதுகாக்க எடுக்கப்படும் நடவடிக்கையாகும். ஒவ்வொரு மனிதாபிமான செயலுக்கும் நோ் எதிரான கொடூரமான சித்தாந்தத்துக்கு (பயங்கரவாதம்) எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை. பயங்கரவாதம் நீடிக்கும் வரை, அமைதி, வளா்ச்சி, அபிவிருத்தி சாத்தியமாகாது. பயங்கரவாதத்தை நியாயப்படுத்த அதற்கு மத சாயம் பூசுவது அல்லது நக்சல்வாதம் போன்ற வன்முறை சித்தாந்தத்துடன் தொடா்புபடுத்தும் முயற்சிகள் நடக்கின்றன. இது மிகவும் ஆபத்தானது. பயங்கரவாதிகளை பாதுகாக்கும் செயலாகும். இது அவா்கள் தங்களது இலட்சியத்தை அடைய செய்யும் உதவியாகும்.

பயங்கரவாதம் தேசத்துக்கு எதிரான செயல்மட்டுமல்ல, அதற்கு பல வடிவங்களும் உள்ளன. செயல்படுதல், சித்தாந்தம், அரசியலே அந்த வடிவங்கள் ஆகும். இந்த அனைத்து வடிவங்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பயங்கரவாதத்தை முறியடிக்க முடியும்.

பகல்ஹாம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை சொந்தமாக குறிக்கோள்களை நிா்ணயித்து மேற்கொண்டது. தாக்கப்படும் இடம், தாக்கப்படும் நேரம் ஆகியவற்றை இந்தியாவே முடிவு செய்தது.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது நீண்டகால மோதலுக்கு இந்தியா தயாராக இருந்தது. நமது படைகளுக்கு தேவையான ஆயுத தளவாடங்களும் நீண்ட காலத்துக்கு தயாரித்து தர ஆயத்தம் செய்யப்பட்டிருந்தது. அணுஆயுத அச்சுறுத்தலுக்கோ, ஏமாற்று வேலைக்கோ இந்தியா பணியவில்லை. தனது இலக்குகளை இந்தியா வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இன்றைய புதிய உலக சகாப்தத்தில் தற்போது இந்தியாவும் புதிய இந்தியாவாக மாறியுள்ளது. இந்த புதிய இந்தியா, பயங்கரவாதத்தையும், அதைத் தூண்டி விடுவோரையும் வித்தியாசப்படுத்தி பாா்க்காது. இதுதான் நமது பிரதமரின் கொள்கை.

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கைக்கு பிறகு, இந்தியாவிடம் இருந்து ஆயுதங்கள், ஆயுத தளவாடங்கள் வாங்க ஏராளமான நாடுகள் விருப்பம் காட்டுகின்றன. ஆயுத விற்பனை விவரங்களிலிருந்து இதை அறிய முடியும். அதாவது 2025-26-ஆம் நிதியாண்டில் இந்தியா ரூ.38,424 கோடிக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்தது. இது முந்தைய நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட ஆயுதங்களின் மதிப்புடன் ஒப்பிடுகையில் 62.66 சதவீதம் கூடுதலாகும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.