கேரளம், அஸ்ஸாம் மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் வியாழக்கிழமை (ஏப். 9) ஒரே கட்டமாக பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
புதுவையில்...: புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 30 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. மொத்தம் 294 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 9.50 லட்சம் வாக்காளர்கள் (ஆண்கள் 4,46,667, பெண்கள் 5,03,832, மூன்றாம் பாலினத்தவர் 140) வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
என்.ஆர். காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான என்.ரங்கசாமி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைக் கொண்ட எதிர்க்கட்சி கூட்டணிக்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. விஜய்யின் தவெக தலைமையிலான கூட்டணியும் போட்டியிடுகிறது.
கேரளத்தில்...: 140 தொகுதிகளைக் கொண்ட கேரளத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2.71 கோடியாகும் (ஆண்கள் 1.32 கோடி, பெண்கள் 1.39 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 273).
ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்டிஎஃப்), காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்), பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 883 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
முக்கிய வேட்பாளர்கள்: முதல்வர் பினராயி விஜயன் (தர்மடம்), காங்கிரஸை சேர்ந்த பேரவை எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன் (பரவூர்), மாநில பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் (நேமம்) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாவர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வரும் முனைப்பிலும், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கிலும் களம் காண்கின்றன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதுவதால் மும்முனைப் போட்டி நிலவுகிறது.
அஸ்ஸாமில்...: அஸ்ஸாமில் 126 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் மொத்தம் 722 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களின் வெற்றி-தோல்வியை 2.50 கோடி வாக்காளர்கள் (ஆண்கள் 1.25 கோடி, பெண்கள் 1.25 கோடி, மூன்றாம் பாலினத்தவர் 318) தீர்மானிக்கவுள்ளனர்.
அஸ்ஸாமில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியும், ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் தலைமையிலான எதிரணியும் களம் காண்கின்றன.
முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா (ஜலுக்பாரி), மாநில காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் (ஜோர்ஹட்) உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்களாவர்.
மே 4-இல் வாக்கு எண்ணிக்கை: தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்.23, 29-ஆம் தேதியும் தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
கேரளம், அஸ்ஸாம், தமிழகம், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேச தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் மே 4-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்?: காா்கேயிடம் அறிக்கை சமா்ப்பிப்பு

கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் மேலிட பாா்வையாளா்கள் ஆலோசனை

கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனை

தமிழகத்தில் திமுக ஆட்சி தொடரும்- வாக்குக் கணிப்பில் தகவல்: மேற்கு வங்கம், அஸ்ஸாமில் பாஜக; கேரளத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
