மின்னல் வேகத்தில் ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய உலகம், வசதி வாய்ப்புகள், அதிநவீன தொழில்நுட்பங்கள், ஆடம்பரங்கள் என அனைத்துக்கும் காரணமான பணத்தைத் தேடிப் பெரிய வேட்டையை நடத்திக்கொண்டிருக்கிறது. இந்த பரபரப்பான ஓட்டத்தில், ஒருவரின் வெற்றிக்கு தகுதியளிக்கும் முகவரி எது என்று கேட்டால், பலரும் தயக்கமின்றிச் சுட்டிக்காட்டுவது பொருட்செல்வமான பணத்தை மட்டுமே.
ஆனால், ஒரு மனிதனின் முழு வெற்றிக்கும், உண்மையான சாதனைக்கும் பணம் மட்டுமே முழுக் காரணமாகி விடுமா? ஏனெனில், பணம் என்பது ஒரு மனிதனின் அர்த்தமுள்ள வெற்றியின் வரைபடத்தில், அது ஒரு சிறு பகுதி மட்டுமே; அதுவே முழு முகவரி அல்ல என்பதை அனைவரும் புரிந்து கொள்வது அவசியம்.
பணம் ஏன் வெற்றியின் மிக முக்கியமான அடையாளமாகக் கருதப்படுகிறது என்பதற்கு, இந்த பரபரப்பான உலகம் பல வலுவான காரணங்களை நம் முன்னே அடுக்கிக் காட்டும். பெரும்பாலும், நிரந்தரமில்லாத வேலைவாய்ப்புகளும் மற்றும் நிச்சயமற்ற எதிர்காலமும் நிறைந்துள்ள இந்தக் காலத்தில், பணம்தான் ஒருவருக்கு அசைக்க முடியாத நம்பிக்கையான பாதுகாப்பை வழங்குகிறது. எதிர்பாராத மருத்துவச் செலவுகள் அல்லது வேலை இழப்பு போன்ற நெருக்கடிச் சூழல்களைச் சமாளிக்கப் பணம் அத்தியாவசியமானது.
ஒருவருக்கு சிறந்த தொழில், வீடு, வாகனம், கல்வி, தரமான மருத்துவம், விருந்து, கேளிக்கை, ஆடம்பரப் பயணம் போன்ற அனைத்தையும் பணம் அளிக்கிறது என்பது உண்மைதான். பணத்தின் இந்த வலிமை சமூகத்தில் ஒருவருடைய கெüரவத்தையும், மதிப்பையும் உயர்த்துவதாக நடைமுறை உலகம் நம்புகிறது.
ஒருவர் நினைப்பதை எல்லாம் அடையத் தேவையான அனைத்து வாய்ப்புகளையும் பணம் தடையின்றி வழங்குகிறது. பணம் இல்லாதவர்கள் பல கனவுகளைத் துறக்கவும், ஆசைகளைத் தியாகம் செய்யவும் நேரிடும்போது, பணக்காரர்கள் அவற்றை எளிதில் அடைந்து விடுகிறார்கள். இதனால், அனைவருக்கும் பணத்தின் மீதான தீராத ஈர்ப்பும், பெருங்கனவும் அதிகரிக்கிறது. எனவே, பணம் என்பது ஒருவரைச் சமூகத்தில் அங்கீகரிக்கச் செய்யும் தவிர்க்க முடியாத ஒரு புறக் காரணியாகச் செயல்படுகிறது என்ற வலுவான வாதத்தைத் தவிர்க்க இயலாது.
வேகமான உலகில், பலரும் பணத்தை நோக்கிய தீவிர வேட்டை நடத்தும்போது, ஆரோக்கியத்தையும் குடும்ப உறவுகளையும் இழக்க வேண்டியிருக்கிறது. ஆண்டுக்குக் கோடிகளை ஈட்டுவது ஒரு வெற்றியாக இருக்கலாம்; ஆனால் மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் மகிழ்ச்சியின்மை, உளவியல் சிக்கல்கள், நிம்மதியின்மை ஆகிய உள்ளத்துச் சுமைகளுடன் வாழ்வதற்குப் பெயர் வெற்றியா? ஒரு மனிதனின் உண்மையான வெற்றி என்பது, பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கும், தனிப்பட்ட மன அமைதிக்கும் இடையில் ஒரு சரியான சமநிலையைப் பேணுவது ஆகும். வேலையிலும் வாழ்க்கையிலும் பொருளீட்டலிலும் ஒரு சிறந்த ஒத்திசைவைக் காண்பதே உள்ளுணர்வு தரும் உண்மையான மனநிறைவு.
பணத்தை வைத்து மிகப் பெரிய மாளிகைகளை வாங்கலாம்; ஆனால், அதற்குள் நிம்மதியான குடும்பத்தைக் குடியேற்ற முடியாது. பரபரப்பான உலகில் மனித உறவுகள் சிதைந்து வருகின்றன. எனவே, உண்மையான அன்பு கொண்ட குடும்பம், நம்பகமான நண்பர்கள், சமூகத்தின் மீதான நல்லுறவு ஆகியவை பணத்தால் வாங்க முடியாத விலைமதிப்பற்ற உறவுச் சொத்துகள் ஆகும்.
ஒருவன் தன் வாழ்க்கையில் பெறும் அன்பு, மதிப்பு, மற்றும் சமூக மரியாதை ஆகியவை, அவனது வங்கிக் கணக்கில் உள்ள தொகையைவிடப் பல மடங்கு மதிப்பு வாய்ந்த வெற்றியைத் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்குகின்றன. அன்பு, சமூக சேவை மற்றும் மனிதநேயத்தின் அடித்தளத்தில் கட்டப்படும் வெற்றியே என்றும் நிலைத்திருக்கும்.
செல்வச் செழிப்பில் கொடிகட்டிப் பறந்த எத்தனையோ பெரும் பணக்காரர்களின் வெற்றி, சில ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றில் காணாமல் போய்விடுகிறது. ஆனால், செயற்கரிய சேவைகளால் சமூகத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய அப்துல் கலாம், அன்னை தெரசா போன்றோரின் வெற்றி தலைமுறைகளைக் கடந்தும் இன்றும் பேசப்படுகிறதே! அப்படியெனில், எது ஒரு மனிதரின் நிரந்தர வெற்றி? ஒரு மனிதர்தான் ஈட்டிய செல்வத்தையும் அறிவையும் கொண்டு, மற்றவர்களின் வாழ்க்கையை எந்த அளவுக்கு மேம்படுத்தினார் என்பதே அவரது வெற்றியில் அவர் பதிக்கும் ஆழமான தார்மிக முத்திரையாகும்.
பணம் என்பது ஓர் இலக்கை அடைவதற்கான சக்தி வாய்ந்த கருவிதான்; ஆனால், அதுவே வாழ்வின் ஒட்டுமொத்த இலக்காக மாறும்போதுதான், வாழ்க்கை தனது அர்த்தத்தை இழக்கிறது. ஒரு மனிதனின் வெற்றியைத் தீர்மானிப்பதில் பணம் ஒரு முக்கியமான கருவியாக உள்ளது; ஆனால், அதுவே இலக்கு அல்ல.
பணம் ஒருவரை அதிகாரம், வாய்ப்புகள் மற்றும் ஆடம்பரத்தை நோக்கி இட்டுச் செல்லலாம். இருப்பினும், நிலையற்ற வாழ்வில் நிரந்தர மகிழ்ச்சி, நீடித்த புகழ், மற்றும் அர்த்தமுள்ள வாழ்க்கை ஆகியவற்றை உறுதி செய்வது, ஒருவரின் அறநெறிப் பண்புகள், ஆரோக்கியம் மற்றும் அவர் மற்றவர்களுடன் கொண்டுள்ள அன்பான அணுகுமுறையும், ஆழமான உறவுகளும், சமூகத்துக்கான சேவைகளுமே ஆகும்.
பணத்தை மட்டுமே ஒருவரின் முழு வெற்றியாக எடைபோடுவது, அது மனித வாழ்வின் ஆழமான அர்த்தங்களைப் புறக்கணிப்பதாகி விடும். எனவே, வெற்றியை நாம் ஒரு முப்பரிமாணக் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்; பொருளாதாரம், உளவியல், மற்றும் சமூகவியல் ஆகிய இந்த மூன்று தளங்களிலும் சீரான சமநிலை காண்பவரே உண்மையான வெற்றியாளர். அத்தகையவரைத்தான் இந்த உலகம் நிரந்தர முழு வெற்றியாளராகக் கொண்டாடும்...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சொல்லப் போனால்... பெட்டிக்குள் உறங்கும் பூதம்!

சொல்லப் போனால்... பஹல்காமின் இருளும் ஒளியும்!
சித்திரவதைக்கு எதிரான தீர்ப்பு!
போரில்லா உலகம் - பேரன்பு
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

