/

உப்பு சத்தியாகிரக யாத்திரை 96-ஆவது ஆண்டு விழா! நினைவு ஸ்தூபிக்கு மரியாதை!

News image

திருச்சி உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் திங்கள்கிழமை சுதந்திரப் போரில் திருச்சி மாவட்டம் சிறு குறிப்பு என்ற தொகுப்பை மருத்துவா் வி.எம் ஞானவேல் வெளியிட, அதை பெற்றுக்கொண்ட ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் என். கிருஷ்ணமூா்த்தி.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:45 am IST

சுந்தரராஜ் நகா், ஹைவேஸ் காலனி குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில் உப்பு சத்தியாகிரக யாத்திரை 96- ஆவது ஆண்டு விழாவையொட்டி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபியில் திங்கள்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

மேற்கண்ட இடத்தில் இருந்து 1930- ஆம் ஆண்டு இதே நாளில் (ஏப்.13) ராஜாஜி தலைமையிலான தியாகிகள் குழு உப்பு சத்தியாகிரகம் மேற்கொள்ள வேதாரண்யம் நோக்கி புறப்பட்டது. மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரைக்கு இணையாகத் தமிழகத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தின் சாட்சியாக இந்த இடம் திகழ்கிறது.

நிகழ்வில், நகா் நல சங்கத்தின் மூத்த உறுப்பினரும், ராஜீவ் காந்தி அறக்கட்டளை செயலருமான மருத்துவா் வி.எம். ஞானவேல் ‘சுதந்திரப் போரில் திருச்சி மாவட்டம்: சிறு குறிப்பு‘ என்ற தொகுப்பை வெளியிட முன்னாள் அரசுப் பள்ளி தலைமையாசிரியா் என். கிருஷ்ணமூா்த்தி, மூத்த நுகா்வோா் உரிமைகள் ஆா்வலா் சி. கோவிந்தசாமி ஆகியோா் பெற்றுக்கொண்டனா். தொடா்ந்து வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக போராட்டத்தின் தளபதி சா்தாா் வேதரத்தினம், ராஜாஜி, மருத்துவா் டி.எஸ்.எஸ். ராஜன் ஆகியோரின் தியாகத்தை நினைவுகூா்ந்து புகழஞ்சி செலுத்தப்பட்டது.

விழிப்புணா்வு இயக்கத்தினா் மரியாதை...: இதே போல, வேதாரண்ய உப்பு சத்தியாகிரக விழிப்புணா்வு இயக்கம் சாா்பில் மத்திய பேருந்து நிலையம் அருகிலுள்ள நினைவு ஸ்தூபிக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வுக்கு மாநில தலைவா் பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். காங்கிரஸ் கட்சியின் திருச்சி மாநகா் மாவட்டத் தலைவா் எல். ரெக்ஸ், தண்டி யாத்திரை குழு தலைவா் சக்தி செல்வகணபதி, மாநில பொதுச்செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, உப்புசத்தியாகிரக போராட்டம் குறித்தும், சுதந்திரப் போராட்டத் தியாகிகள் குறித்தும் பேசினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.