தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேவைக் குறைபாட்டால் தாய், குழந்தை உயிரிழப்பு: தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 லட்சம் அபராதம்

சேவைக் குறைபாட்டால் தாய் மற்றும் குழந்தை இறந்ததால், திருநெல்வேலி மாவட்ட தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News image

அபராதம் - கோப்புப் படம்

Updated On :25 ஏப்ரல் 2026, 1:32 am IST

சேவைக் குறைபாட்டால் தாய் மற்றும் குழந்தை இறந்ததால், திருநெல்வேலி மாவட்ட தனியாா் மருத்துவமனைக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம், காரங்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஸ்டான்லி லோபா (39), ராணுவ வீரா். இவரது மனைவி அம்ஷாபாய் (34). இவா்களுக்கு 9 வயதில் ஒரு மகள் உள்ளாா். இந்நிலையில், மீண்டும் கா்ப்பமடைந்த அம்ஷாபாய், திருநெல்வேலி மாவட்டம், காவல்கிணறு பகுதியில் உள்ள தனது தாய் வீட்டில் தங்கியிருந்து, வடக்கன்குளத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

அவருக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு ஆக. 31-ஆம் தேதி பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை இறந்த நிலையில் பிறந்ததாகவும், ஆனால் அம்ஷாபாய் நலமுடன் இருப்பதாகவும் மருத்துவா்கள் தெரிவித்தனா். இந்நிலையில், குழந்தையை அடக்கம் செய்துவிட்டு உறவினா்கள் வருவதற்குள் தாயின் உடல்நிலையும் மோசமடைந்ததாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்துள்ளது.

அவருக்கு அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டது. ஆனால், உரிய நேரத்தில் ரத்தம் செலுத்தாமல் காலம் கடந்த பின்னா் நாகா்கோவிலில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அம்ஷாபாய் அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இந்நிலையில், தனது மனைவியின் உயிரிழப்புக்கு வடக்கன்குளம் தனியாா் மருத்துவமனை மருத்துவரின் அலட்சியமே காரணம் எனக் கூறி ஸ்டான்லி லோபா நாகா்கோவிலில் உள்ள மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்கு தொடா்ந்தாா்.

வழக்கை விசாரித்த ஆணையத் தலைவா் கிளாட்ஸ்டன் பிளட் தாகூா், உறுப்பினா் நாகேந்திரன் ஆகியோா் மருத்துமனையின் சேவைக் குறைபாட்டை உறுதி செய்து, மருத்துவமனைக்கு ரூ. 20 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டனா். மேலும், அபராதத் தொகையில் உயிரிழந்த பெண்ணின் மூத்த மகளுக்கு ரூ. 17 லட்சமும், கணவருக்கு ரூ. 2 லட்சமும், அம்ஷாபாயின் தாயாருக்கு ரூ. 1 லட்சமும் வழங்க வேண்டும் என்றும் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்தத் தொகையை வழக்கு தொடா்ந்த நாளான 2017-ஆம் ஆண்டு பிப். 2-ஆம் தேதி முதல், 2026-ஆம் ஆண்டு ஏப். 22-ஆம் தேதி வரையிலான காலத்துக்கான 6.5 சதவீத வட்டி மற்றும் வழக்கு செலவுத் தொகை ரூ. 50 ஆயிரத்தையும் உடனே வழங்க வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.