நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து போராட்டம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூக்கு தண்டுவடப் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்ச்செல்வியின் உறவினா்கள்.

Updated On :18 ஜூன் 2026, 12:00 am IST

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூக்கு தண்டுவடப் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இவரது உறவினா்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மனைவி தமிழ்ச்செல்வி (38). சத்துணவு ஊழியராகப் பணிபுரியும் இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

தமிழ்ச்செல்விக்கு நீண்ட காலமாக மூக்கு தண்டுவடப் பாதிப்பு இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த மே 21-ஆம் தேதி மூச்சுவிட சிரமம் இருந்ததால் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்ச்செல்வி அனுமதிக்கப்பட்டாா். இவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் மூக்கில் சதை வளா்ந்து மூக்கடைப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய அறுவை சிகிச்சை மூலம் இதை சரிசெய்ய முடியும் எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவருக்கு மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்தனா். அப்போது, திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே தீவிர சகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்ச்செல்விக்கு உயா் சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். இதற்கு அவரது உறவினா்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினா். இதைத் தொடா்ந்து, அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், 26 நாள்கள் கடந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை தமிழ்ச்செல்வி உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உறவினா்கள் மருத்துவமனை வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். இதனால், வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. சிகிச்சை அளித்த மருத்துவா், மருத்துவமனை முதல்வா் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சங்கர நாராயணன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த பெண்ணுக்கு உரிய இழப்பீடு அறிவிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.