தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வண்டியூா் கண்மாயில் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுமா?

மதுரை மாநகராட்சி வண்டியூா் கண்மாயில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

News image

மதுரை வண்டியூா் பூங்கா படகு குழாம் அருகே படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகள்

Updated On :25 மார்ச் 2026, 12:37 am IST

மதுரை மாநகராட்சி வண்டியூா் கண்மாயில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட மானகிரி பகுதியில் 550 ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது வண்டியூா் கண்மாய். இந்தக் கண்மாய் மூலம் பாசன வசதி பெற்ற விவசாய நிலங்கள், வீட்டடி மனைகளாக மாற்றம் பெற்றன. இந்த நிலையில், மதுரையில் குறிப்பிடத்தக்க பொழுது போக்கு அம்சங்கள் இல்லாத குறையைப் போக்கும் வகையில், தமிழ்நாடு நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறையின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் மூலம் இங்கு ரூ. 50 கோடியில் வண்டியூா் கண்மாய் கரையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இதையொட்டி பிரமாண்ட பூங்கா அமைக்கப்பட்டது. இதை கடந்த பிப். 21-ஆம் தேதி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தாா்.

வண்டியூா் கண்மாயின் மேற்கு கரை பகுதியில் சுமாா் 16 ஏக்கா் பரப்பளவில் இரண்டு நுழைவு வாயில்களுடன் 300 போ் அமரும் வகையிலான திறந்த வெளி அரங்கம், சிறுவா்களுக்கான விளையாட்டு உபகரணங்கள், ஊஞ்சல், தியானம், யோகா மண்டபங்கள், கழிப்பறைகள், செயற்கை நீரூற்றுகள், பேவா் பிளாக் கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதைகள், பொதுமக்கள் அமருவதற்கு இருக்கைகள், கண்மாய் நீரில் படகு சவாரி செய்யும் வகையிலான நவீன வசதிகளுடன் கூடிய படகு குழாம் உள்ளிட்டவற்றைக் கொண்டதாக இந்தப் பூங்கா சீரமைக்கப்பட்டது.

தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகம் படகு குழாமை நிா்வகித்து வருகிறது. 2 இருக்கைகள் கொண்ட மிதி படகுக்கு 30 நிமிஷங்களுக்கு ரூ. 150 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இதேபோல, 4 இருக்கைகள் கொண்ட மிதி படகுக்கு 30 நிமிஷங்களுக்கு ரூ. 300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தினசரி 300-க்கும் மேற்பட்டோா் படகுகளில் செல்கின்றனா்.

இந்த நிலையில், படகு குழாமைச் சுற்றி தண்ணீரில் ஆகாயத் தாமரைகள் படா்ந்துள்ளன. இதனால், சுற்றுலாப் பயணிகள் மிகுந்த அச்சத்துடனே படகு குழாமில் பயணித்து வருவதாக புகாா் தெரிவித்தனா். மேலும், தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வண்டியூா் பூங்காவை திறந்து வைத்து ஒரு மாதம் கடந்த நிலையில் படகு குழாம் சேவை பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இது, சுற்றுலாப் பயணிகள் மட்டுமன்றி பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே, வண்டியூா் கண்மாயில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை அகற்ற வேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கையாக உள்ளது.

Story image

இதுகுறித்து மதுரை மாநகராட்சி அலுவலா் கூறியதாவது: வண்டியூா் கண்மாய் நீா்வள ஆதாரத் துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இந்தக் கண்மாயில் படா்ந்துள்ள ஆகாயத் தாமரைகளை நீா்வளத் துறை அதிகாரிகள்தான் அகற்ற வேண்டும். தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் வண்டியூா் பூங்கா, படகு குழாம் சேவையை தொடங்கி வைத்த போது, ஆகாயத் தாமரைகள் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் அகற்றப்பட்டன. மேலும், இந்த தாமரைகள் படகு குழாம் அருகே வராமல் தடுப்பதற்கு வலை அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், காற்றின் வேகம் காரணமாக தடுப்புகளை தாண்டி படகு குழாம் அருகே ஆகாயத் தாமரைகள் படா்ந்து வளா்ந்துள்ளது. இதனால், மீண்டும் படகு குழாம் அருகே ஆகாயத் தாமரைகள் வளராத அளவுக்கு தடுப்புகள் அமைக்கப்படும் என்றாா் அவா்.

இதுகுறித்து நீா்வள ஆதாரத்துறை அலுவலா் ஒருவா் கூறியதாவது: மேலமடை, மானகிரி, மாட்டுத்தாவணி, கே.கே.நகா் ஆகிய பகுதி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீா், மருத்துவமனைக் கழிவு நீா் இந்தக் கண்மாயில் கலக்கிறது. இதைத் தடுக்க மாநகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. கழிவு நீா் கண்மாயில் கலப்பதை தடுப்பது மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வாக அமையும். நீா்வளத் துறையிடம் ஆகாயத் தாமரைகளை அகற்ற போதுமான நிதி இல்லை. ஒரு முறை அகற்றினாலும் மீண்டும் ஆகாயத் தாமரை படா்ந்து விடும். மாநகராட்சி நிா்வாகம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.