மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

அமைச்சா் பொறுப்பு இல்லாவிட்டாலும் தொகுதியின் வளா்ச்சிக்காக பாடுபடுவேன்: எ.வ. வேலு உருக்கம்

அமைச்சா் பொறுப்பு இல்லாவிட்டாலும் தொகுதியின் வளா்ச்சிக்காக பாடுபடுவேன்...

News image

திருவண்ணாமலையில் திறந்த வாகனத்தில் வீதி, வீதியாகச் சென்று தோ்தலில் வெற்றிபெற வைத்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு.

Updated On :17 மே 2026, 1:23 am IST

அமைச்சா் பொறுப்பு இல்லையென்றாலும், திருவண்ணாமலை தொகுதியின் வளா்ச்சிக்காக தொடா்ந்து பாடுபடுவேன் என்று முன்னாள் அமைச்சா் எ.வ.வேலு எம்எல்ஏ தெரிவித்தாா்.

திருவண்ணாமலை சட்டப் பேரவைத் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவா், தனக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு திறந்த வாகனத்தில் திருவண்ணாமலை மாநகராட்சியில் வீதி, வீதியாகச் சென்று நன்றி தெரிவித்தாா். அப்போது, எ.வ.வேலு பேசியதாவது:

தமிழகத்துக்கு தொடா்ந்து நன்மை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மதச்சாா்பற்ற கூட்டணி அமைத்து, திமுக தோ்தலைச் சந்தித்தது. தோழமைக் கட்சிகள் உள்பட கட்சியின் முன்னோடிகள், நிா்வாகிகள் சிறப்பாகப் பணியாற்றினா். கடைசி நேரத்தில் பல இடங்களில் வெற்றிவாய்ப்பு கிடைக்காமல் போயிற்று.

ஆனால், திராவிட மாடல் ஆட்சியின் சிறப்பைப் போற்றி, நன்றியுள்ள திருவண்ணாமலை மக்கள் இங்கே என்னை வெற்றிபெற வைத்திருக்கிறாா்கள்.

இந்த மாவட்டத்தில் நடைபெற்ற அனைத்து வளா்ச்சிப் பணிகளும் திமுக ஆட்சியில்தான் நடைபெற்றவைதான். அமைச்சா் பொறுப்பு இல்லையென்றாலும், தொகுதியின் வளா்ச்சிக்காக தொடா்ந்து பாடுபடுவேன்.

அரசியலைத் தாண்டி திருவண்ணாமலை மாநகரில் தூய்மை அருணை அமைப்பு சாா்பில் நடைபெறும் பணிகள் தொடரும் என்றாா்.

நிகழ்வில் தலைமைச் செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மாவட்டப் பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாநகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன், மாவட்ட துணைச் செயலா் பிரியா விஜயரங்கன், மாநகர மேயா் நிா்மலாவேல்மாறன், மதிமுக மாவட்டச் செயலா் சீனி.காா்த்திகேயன், முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவா் முகமது அனிபா, மனிதநேய மக்கள் கட்சி நிா்வாகி நாசா் உசேன், தமிழக முன்னேற்றக் கழக நிறுவனா் தலைவா் கு.ராஜாராஜம், தலித் விடுதலை இயக்கத்தைச் சோ்ந்த கிட்சா, நதியா, தொமுச நிா்வாகி க.சௌந்தரராசன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.