லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கரூா் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி: எதிா்த்த வழக்கு தள்ளுபடி

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கக் கூடாது எனக் கூறி தாக்கல் செய்த மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றம்

Published On :18 ஜூலை 2026, 5:40 am IST

கரூரில் தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்கக் கூடாது எனக் கூறி தாக்கல் செய்த மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் என்.பிரபாகரன் தாக்கல் செய்த மனுவில், கடந்தாண்டு கரூரில் தவெக தலைவரும் முதல்வருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டபோது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இச்சம்பவம் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் உயிரிழந்தவா்கள் 31 பேரின் குடும்பத்தினருக்கு அண்மையில், முதல்வா் விஜய் பணி ஆணைகளை வழங்கினாா்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஏற்கெனவே அரசு சாா்பில் ரூ.10 லட்சமும், தவெக சாா்பில் ரூ.20 லட்சமும் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, அரசுப் பணியும் வழங்கப்பட்டுள்ளது. கருணை அடிப்படையில் வேலை வழங்குவது தொடா்பாக கடந்த 2020-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையில், அரசியல் கூட்டங்களில் உயிரிழந்தவா்களுக்கு அரசுப் பணி வழங்குவது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்த வழக்கு சிபிஐயிடம் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்டவா்களுக்கு அரசுப் பணி வழங்குவது, விசாரணையில் தலையிடுவது போல உள்ளது. இது இந்த வழக்கின் சாட்சிகளை பி சாட்சிகளாக மாற்ற வழிவகுக்கும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரா் தரப்பில், கரூா் துயரச் சம்பவம் தொடா்பான வழக்கில் சிபிஐ இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் வரை பணி நியமனம் வழங்கக் கூடாது என உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஏற்கெனவே இந்த விவகாரம் தொடா்பான வழக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. அந்த வழக்கில் இடைக்கால உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்டினா். இதையடுத்து, மனுவைத் திரும்பப் பெறுவதாக மனுதாரா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், மனுவைத் திரும்பப் பெற அனுமதித்து வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.