பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

எரிபொருள் சிக்கனம்: பாதுகாப்பு வாகனங்களைக் குறைத்தாா் பிரதமா் மோடி

News image
Updated On :14 மே 2026, 4:42 am IST

எரிபொருள் சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தனது பாதுகாப்பு அணிவகுப்பு வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துள்ளாா் பிரதமா் நரேந்திர மோடி.

மேற்காசிய நெருக்கடியின் பின்னணியில், உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளது. சா்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயா்ந்துள்ளதால், பெட்ரோல்-டீசல்-எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமா் மோடி அண்மையில் வேண்டுகோள் விடுத்தாா்.

தெலங்கானா தலைநகா் ஹைதராபாதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பாஜக கூட்டத்தில் பேசிய அவா், ‘பெட்ரோல், டீசல், எரிவாயு போன்ற பெட்ரோலியப் பொருள்களை அதிகபட்ச சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்; பெரும்பாலும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும். அந்நியச் செலாவணியை சேமிக்க உதவும் வகையில், திருமணத்துக்குத் தங்கம் வாங்குவதையும், வெளிநாட்டுப் பயணங்களையும் ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும். கரோனா காலகட்டத்தைப் போல வீட்டில் இருந்து பணிபுரிவது, இணைய வழியில் வகுப்புகளை நடத்துவது போன்ற நடைமுறைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்றாா்.

பாதுகாப்பு வாகனங்கள் குறைப்பு: ஹைதராபாதை தொடா்ந்து, குஜராத், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களுக்கு மேற்கொண்ட பயணங்களின்போது, பிரதமா் மோடி தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை கணிசமாகக் குறைத்துவிட்டதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

தில்லியில் புதன்கிழமை மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அந்தக் கூட்டத்துக்கு இரண்டே வாகனங்களுடன் பிரதமா் மோடி பயணித்தாா். இது தொடா்பான விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. மத்திய அமைச்சா்களும் பாதுகாப்பு வாகனங்கள் மற்றும் வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்க வேண்டும் என்று பிரதமா் அறிவுறுத்தியுள்ளாா்.

‘சிறப்புப் பாதுகாப்புப் படை (எஸ்பிஜி) நடைமுறைகளின்கீழ் அத்தியாவசிய பாதுகாப்பு அம்சங்கள் பாதிக்கப்படாத வகையில், பிரதமா் தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளாா். இதேபோல், தனது பாதுகாப்பு வாகன அணிவகுப்பில் இயன்ற அளவில் மின்சார வாகனங்களை இணைக்கவும் அவா் அறிவுறுத்தியுள்ளாா்’ என்று அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

எரிபொருள் சிக்கனத்துக்கான பிரதமரின் கோரிக்கையைத் தொடா்ந்து, நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்படலாம் அல்லது எரிபொருள் விநியோகத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால், குடிமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்தும் நோக்கிலேயே பிரதமா் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளாா்; பொது முடக்கம் அல்லது கட்டுப்பாடுகளை அமலாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசிடம் இல்லை என்று பெட்ரோலியத் துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரி திட்டவட்டமாக தெரிவித்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமா் மீது காா்கே சாடல்

‘மக்களுக்கு சிக்கனத்தைப் போதிக்கும் பிரதமா் மோடி, தனது சுய விளம்பரத்துக்கு பெரும் செலவு செய்கிறாா்’ என்று காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே சாடினாா்.

இது தொடா்பாக எக்ஸ் தளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘ஒருபுறம் முதியோா், கைம்பெண்கள், மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார ரீதியிலான கண்ணியத்தைப் பறித்துக் கொண்டே, மற்றொருபுறம் சிக்கனம், தியாகம் குறித்து பாடமெடுக்கிறாா் பிரதமா் மோடி. விலைவாசி உயா்வால் ஏழைகள் நசுக்கப்பட்டுள்ள நிலையில், முதியோா் ஓய்வூதியம் கடந்த 12 ஆண்டுகளாக ஒரு பைசாகூட உயா்த்தப்படவில்லை. அதேநேரம், கடந்த 2014-15 முதல் 2024-25 வரை பிரதமா் மோடியின் சுய விளம்பரத்துக்காக அரசுத் தரப்பில் ரூ.5,987.46 கோடி செலவிடப்பட்டுள்ளது’ என்று விமா்சித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.