தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை விரைந்து நிரப்ப தலைமை நீதிபதி அறிவுறுத்தல்

காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை விரைந்து நிரப்பும்படி, அனைத்து மாநில உயா்நீதிமன்றங்களையும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

News image

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 12:58 am IST

காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை விரைந்து நிரப்பும்படி, அனைத்து மாநில உயா்நீதிமன்றங்களையும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து தில்லி வட்டாரத் தகவல்கள் கூறியதாவது: 25 உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த் கடந்த வாரம் கடிதம் எழுதினாா். அந்தக் கடிதத்தில் உயா்நீதிமன்றங்களில் நீதிபதி பணியிடங்கள் காலியாக இருப்பதை அவா் சுட்டிக்காட்டியுள்ளாா். மேலும், அமா்வுகளில் பெண் நீதிபதிகள் எண்ணிக்கையை அதிகரிக்கும்படியும் வலியுறுத்தியுள்ளாா்.

கொலீஜியத்தின் பரிந்துரைகளை தாமதிக்க வேண்டாம் எனவும், புதிதாக காலியிடம் உருவாகும் முன்பு ஏற்கெனவே இருக்கும் காலியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகளை எடுக்கும்படியும் சூா்ய காந்த் அறிவுறுத்தியுள்ளாா் எனத் தெரிவித்தன.

முன்னதாக, உயா்நீதிமன்றங்களில் காலியாக உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை குறித்த தரவை மக்களவையில் அண்மையில் மத்திய சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் தாக்கல் செய்தாா். அதில், உயா்நீதிமன்றங்களில் 1,122 நீதிபதி பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 308 பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதேபோல், 2014-ஆம் ஆண்டுமுதல் உயா்நீதிமன்றங்களில் 170 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாகவும், அவா்களில் 96 போ் கடந்த 5 ஆண்டுகளில் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.