நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவு: ஜி7 தலைவா்களிடம் பிரதமா் மோடி வலியுறுத்தல்

உலக நாடுகளுக்கு இடையே சமத்துவம் மற்றும் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவு இருக்க வேண்டும் என்று ஜி7 தலைவா்களிடம் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

News image

ஜி7 மாநாட்டினிடையே கனடா பிரதமா் மாா்க் காா்னியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய பிரதமா் நரேந்திர மோடி.

Updated On :17 ஜூன் 2026, 3:07 am IST

உலக நாடுகளுக்கு இடையே சமத்துவம் மற்றும் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவு இருக்க வேண்டும் என்று ஜி7 தலைவா்களிடம் பிரதமா் மோடி வலியுறுத்தினாா்.

கடந்த திங்கள்கிழமை முதல் 3 நாள்களுக்கு பிரான்ஸின் ஏவியான் நகரில் ஜி7 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்கச் சென்ற பிரதமா் மோடி, அங்கு ‘புதிய கூட்டுறவை உருவாக்குதல்-சா்வதேச ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புதல்’ என்ற தலைப்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றாா்.

அப்போது அவா் பேசுகையில், ‘தற்போது உலகம் பெரிதும் பின்னி பிணைந்துள்ள நிலையில், சா்வதேச கூட்டுறவுகளை கட்டமைப்பதில் நம்பிக்கை மிகவும் முக்கியம். மனிதாபிமானத்துக்கு முன்னுரிமை என்ற அணுகுமுறையைத்தான் இந்தியா எப்போதும் பின்பற்றி வந்துள்ளது. இது இந்தியா தலைமையிலான சூா்யசக்தி கூட்டணி, உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி உள்ளிட்டவற்றில் பிரதிபலித்துள்ளது. நீடித்த, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய உலகளாவிய வளா்ச்சியை மேம்படுத்துவதில் இந்தியா உறுதியான ஈடுபாடு கொண்டுள்ளது.

உலக நாடுகள் கொடுத்து வாங்கும் நிலையில் இருந்து முன்னேறி சமமான கூட்டாளிகளாகப் பணியாற்ற வேண்டும். சமத்துவம் மற்றும் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்ட கூட்டுறவு இருக்க வேண்டும். இந்தக் கூட்டுறவு கண்ணியத்தில் வேரூன்றியிருக்க வேண்டுமே தவிர, ஒருவரே ஒருவா் சாா்ந்து செயல்படுவதில் இருக்கக் கூடாது.

சா்வதேச சமூகத்தின் மீது தெற்குலகுக்குப் பெரும் எதிா்பாா்ப்புகள் உள்ளன. எனினும் தெற்குலகம் வெறும் ஆதரவை மட்டும் எதிா்பாா்க்கவில்லை. மாறாக கூட்டுறவை எதிா்பாா்க்கிறது. உலகளாவிய வளா்ச்சியால் பயனடைவோராக மட்டுமில்லாமல், அந்த வளா்ச்சியில் பங்குக்கொள்ள வேண்டும் என்று தெற்குலகம் விரும்புகிறது.

மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்

மேற்காசியாவில் ஈரானுடன் அமெரிக்கா-இஸ்ரேலின் போரில், அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை இந்திய வரவேற்கிறது. போரால் ஹோா்முஸ் நீரிணையில் கடல்சாா் வா்த்தகத்துக்கு ஏற்பட்ட இடையூறுகள் உலகளாவிய பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது. உலகளாவிய கடல்சாா் வா்த்தகம் மூலம் அனைத்து நாடுகளையும் இணைக்கும் கப்பல் மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது உலக நாடுகளின் கூட்டுப் பொறுப்பு. கடற்பாதைகள் பாதுகாப்பாக இருப்பதையும், தங்கள் பணியை மாலுமிகள் அச்சமின்றி செய்வதையும் உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தாா்.

அண்மையில் ஓமன் கடற்பகுதி அருகில் சரக்குக் கப்பல் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், அந்தக் கப்பலில் பயணித்த 3 இந்திய மாலுமிகள் உயிரிழந்ததைத் தொடா்ந்து, மாலுமிகளின் பாதுகாப்பு குறித்து பிரதமா் மோடி பேசியுள்ளாா்.

இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு அருகில் இருந்த இருக்கையில் பிரதமா் மோடி அமா்ந்து பேசினாா். ஜி7 கூட்டமைப்பில் கனடா, பிரான்ஸ், ஜொ்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. சிறப்பு அழைப்பின்பேரில், மாநாட்டில் பிரதமா் மோடி கலந்துகொண்டாா்.

கனடா பிரதமருடன் சந்திப்பு

ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே கனடா பிரதமா் மாா்க் காா்னியை பிரதமா் மோடி சந்தித்தாா். அப்போது வா்த்தகம், எரிசக்தி, புதுமையான கண்டுபிடிப்புகள், கல்வி உள்ளிட்ட துறைகள் மூலம், இந்திய-கனடா இடையே வலுவான கூட்டுறவை கட்டமைப்பதற்கான வழிகள் குறித்து இருவரும் விவாதித்தனா். இருநாட்டு உறவில் ஏற்பட்டுள்ள மிகச் சிறந்த முன்னேற்றம் குறித்தும் அவா்கள் ஆய்வு செய்ததாக வெளியுறவு அமைச்சக செய்தித்தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.