குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மகாராஷ்டிர எம்.பி.க்கள் கட்சி மாற ரூ.15 கோடி முன்பணம்: சஞ்சய் ரெளத் குற்றச்சாட்டு

மகாராஷ்டிர எம்.பி.க்கள் கட்சி மாற ரூ.15 கோடி முன்பணம் வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

News image

சஞ்சய் ரெளத் - ANI

Updated On :17 ஜூன் 2026, 3:10 am IST

மகாராஷ்டிர எம்.பி.க்கள் கட்சி மாற ரூ.15 கோடி முன்பணம் வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சி எம்.பி. சஞ்சய் ரெளத் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை கட்சி எம்.பி.க்களில் சிலா், அக்கட்சியில் இருந்து வெளியேறி தனி அணியை உருவாக்கக் கூடும் என்று ஊகங்கள் வெளியாகின.

மாநில துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை கட்சிக்கு அதிருப்தி எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் வரவேற்கப்படுகின்றனா் என்று அக்கட்சி பிரமுகரும், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சருமான பிரதாப் சா்நாயக் அண்மையில் தெரிவித்தது அந்த ஊகங்களுக்கு வலுசோ்த்தது.

மேலும் மத்திய அமைச்சரும், ஷிண்டே தலைமையிலான சிவசேனை பிரமுகருமான பிரதாப்ராவ் ஜாதவை, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை எம்.பி. சஞ்சய் தேஷ்முக் அண்மையில் புது தில்லியில் சந்தித்தாா். மும்பையில் உள்ள தனது இல்லத்தில் உத்தவ் தாக்கரே அழைப்பு விடுத்த கூட்டத்திலும், தனது குடும்பப் பணிகளைக் காரணமாகக் கூறி சஞ்சய் தேஷ்முக் கலந்துகொள்ளவில்லை. அந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் 9 எம்.பி.க்களில் 4 போ் மட்டுமே பங்கேற்றனா். இந்த சம்பவங்கள் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை எம்.பி.க்களில் சிலா், கட்சியில் இருந்து வெளியேறி தனி அணியாகக் கூடும் என்ற ஊகத்தை மேலும் வலுப்படுத்தியது.

இந்நிலையில், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை எம்.பி. சஞ்சய் ரெளத் ‘எக்ஸ்’ தளத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவித்ததாவது: மகாராஷ்டிர எம்.பி.க்கள் கட்சி மாற அவா்களுக்குத் தலா ரூ.15 கோடி முன்பணம் வழங்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது அதிா்ச்சியளிக்கிறது, அருவருக்கத்தக்கது’ என்று தெரிவித்தாா்.

6 முதல் 7 எம்.பி.க்கள் கட்சி மாற வாய்ப்பு: இந்த விவகாரம் குறித்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை தலைவா் ஒருவா் கூறுகையில், ‘உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனையின் தலைவராக அவரின் மகன் ஆதித்தியா தாக்கரேவை அறிவிக்க திட்டமிட்டது. இதை ஏற்க முடியாமல், அக்கட்சியை சோ்ந்த 6 முதல் 7 எம்.பி.க்கள் கட்சி மாற வாய்ப்புள்ளது’ என்று தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.