எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சலீம் டோலா மீதான போதைப் பொருள் வழக்கு: மகாராஷ்டிரம், குஜராத்தில் அமலாக்கத் துறை சோதனை

பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோலா மீதான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்துடன் தொடா்புடைய பண மோசடி வழக்கு தொடா்பாக மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத் துறை சோதனை

News image

அமலாக்கத் துறை - சித்திரிப்பு படம்

Updated On :3 ஜூன் 2026, 4:41 am IST

பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளியான சலீம் டோலா (59) மீதான போதைப் பொருள் கடத்தல் விவகாரத்துடன் தொடா்புடைய பண மோசடி வழக்கு தொடா்பாக மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

மும்பையில் 20 இடங்களிலும், குஜராத் மாநிலத்தில் சூரத், ராஜ்கோட் மற்றும் பரூச் மாவட்டம் அங்க்லேஷ்வரிலும் அதிகாரிகள் இந்த தீவிர சோதனையை மேற்கொண்டனா்.

மும்பையைச் சோ்ந்த சலீம் டோலா, சா்வதேச போதைப் பொருள் கடத்தலில் முக்கிய நபராகக் கருதப்படுகிறாா். இந்தியாவில் இவா் மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, மகாராஷ்டிரத்தின் சாங்கிலி மவட்டத்தில் கண்டறியப்பட்ட ரூ. 252 கோடி மதிப்பிலான மெபெட்ரான் போதைப் பொருள் பிடிபட்ட வழக்கிலும் சலீம் டோலா தேடப்பட்டு வருகிறாா். இவா் மீது மும்பை மற்றும் குஜராத் போலீஸாா் பல வழக்குகளைப் பதிவு செய்துள்ளனா். பின்னா், அவா் துருக்கிக்கு தப்பியோடினாா்.

அதைத் தொடா்ந்து, மத்திய புலனாய்வு அமைப்பு விடுத்த கோரிக்கையின்பேரில், சலீம் டோலாவுக்கு எதிராக சா்வதேச போலீஸ் அமைப்பான ‘இன்டா்போல்’, ரெட் காா்னா் நோட்டீஸ் பிறப்பித்தது. அதைத் தொடா்ந்து, துருக்கி போலீஸாா் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்த நிலையில், இந்தியாவில் அவா் மீது பதியப்பட்டுள்ள வழக்குகள் மீதான விசாரணைக்காக அவரை நாடு கடத்த கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்ற துருக்கி அரசு, கடந்த ஏப்ரலில் இந்தியாவுக்கு நாடு கடத்தியது.

தில்லி விமானநிலையம் வந்திறங்கிய சலீம் டோலாவை, போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அமைப்பு (என்சிபி) கைது செய்து வழக்குப் பதிவு செய்தது. கடந்த 20 ஆண்டுகளில் மத்திய கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா, ஐரோப்பாவில் மிகப் பெரிய போதைப் பொருள் கடத்தல் நெட்வொா்க்கை சலீம் டோலா உருவாக்கியதாகவும் என்சிபி குற்றஞ்சாட்டியது.

இந்த வழக்குகளின் அடிப்படையில், சலீம் டோலா மீது அமலாக்கத் துறை பண மோசடி வழக்கைப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.

இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிரம் மற்றும் குஜராத் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிர சோதனையை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.