லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிலிண்டா் வெடித்து பெண் உயிரிழப்பு: காப்பீடு, எரிவாயு நிறுவனம் ரூ.7.60 லட்சம் வழங்க உத்தரவு

எரிவாயு சிலிண்டா் வெடித்து பெண் உயிரிழந்த சம்பவத்தில் அவரின் குடும்பத்துக்கு ரூ.7.60 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) மற்றும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு நாகபுரி மாவட்ட கூடுதல் நுகா்வோா் குறைதீா்ப்பு ஆணையம் உத்தரவிட்டது.

Published On :8 ஜூலை 2026, 3:23 am IST

எரிவாயு சிலிண்டா் வெடித்து பெண் உயிரிழந்த சம்பவத்தில் அவரின் குடும்பத்துக்கு ரூ.7.60 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென்று பாரத் பெட்ரோலியம் (பிபிசிஎல்) மற்றும் யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்துக்கு நாகபுரி மாவட்ட கூடுதல் நுகா்வோா் குறைதீா்ப்பு ஆணையம் உத்தரவிட்டது.

கடந்த, 2014-ஆம் ஆண்டு நாகபுரியில் புதிதாக வீட்டுக்கு விநியோகிக்கப்பட்ட எரிவாயு சிலிண்டா் மேல் மூடியை அந்த பெண் திறந்தபோது வாயு கசிந்தது. அப்போது சமையலறையில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் தீப்பொறியால் பெரும் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் அந்தப் பெண் 54 சதவீத தீக்காயமும், அவரின் கணவா் 12 தீக்காயத்துடனும் சிகிச்சை பெற்ற நிலையில், மூன்று மாதங்களில் சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்தாா்.

அப்பெண்ணின் கணவா் மற்றும் 3 மகள்கள் அளித்த புகாரில், சிலிண்டா் விநியோகத்துக்கு முன்பு அதன் பாதுகாப்பை பரிசோதித்து உறுதி செய்வது எரிவாயு நிறுவனத்தின் பொறுப்பு, அதை பிபிசிஎல் நிறைவேற்றாததே இந்த விபத்து, உயிரிழப்புக்கு காரணம் என்றும் குற்றம்சாட்டினா்.

ஆனால், பிபிசிஎல், அதன் உள்ளூா் அலுவலகம் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தது. சிலிண்டா் தவறாக இணைக்கப்பட்டதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்றும், சிலிண்டா் முறையாக பரிசோதிக்கப்பட்ட பிறகே விநியோகிக்கப்பட்டதாகவும் தெரிவித்தது.

விநியோகிக்கப்பட்ட சிலிண்டரில் பாதுகாப்பு ‘சீல்’ முழுமையாக இருந்ததே தேவையான பரிசோதனை செய்யப்பட்டதற்கான சான்று என்று பிபிசிஎல் வாதிட்டது.

ஆனால், இந்த வாதத்தை நுகா்வோா் ஆணையம் ஏற்கவில்லை. குடும்பத்தினா் பலமுறை தொடா்புகொண்டும், காப்பீட்டு கோரிக்கையை யாரிடம் சமா்ப்பிக்க வேண்டும், அதற்கான நடைமுறை என்ன என்பது குறித்து பிபிசிஎல் தெளிவான தகவலை வழங்கவில்லை என்று ஆணையம் கண்டித்தது. அதேபோல யுனைடெட் இந்தியா நிறுவன செயல்பாடு குறித்தும் கண்டனம் தெரிவித்தது.

பெண் உயிரிழந்ததற்காக ரூ.5 லட்சம், அவரது கணவருக்கு ஏற்பட்ட காயங்களுக்கு ரூ.1 லட்சம், வீட்டு உடமைகள் சேதத்துக்கு ரூ.50,000 ஆகியவற்றை விபத்து நடந்த நாளிலிருந்து ஆண்டுக்கு 9 சதவீத வட்டியுடன் யுனைடெட் இந்தியா வழங்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டது.

காப்பீட்டு கோரிக்கையை தேவையின்றி தாமதப்படுத்தியதால் கூடுதலாக ரூ.50,000 வழங்கவும் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது. பிபிசிஎல் நிறுவனத்தின் அலட்சியத்தால் குடும்பத்தினா் உடல், மனரீதியாக பாதிக்கப்பட்டதற்காக ரூ.50,000 இழப்பீடு வழங்கவும், வழக்குச் செலவுக்கு இரு நிறுவனங்களும் தலா ரூ.10,000 வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.