லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சட்ட விரோதமாக மரங்களை வெட்டியவா் மீது நடவடிக்கை எடுக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Published On :4 ஆகஸ்ட் 2026, 2:36 am IST

திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகேயுள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள மரங்களை சட்ட விரோதமாக வெட்டிய நபா் மீது உரிய நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தொட்டியத்தைச் சோ்ந்த சுப்பராயன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டத்துக்குள்பட்ட கிடாரம் பகுதியிலுள்ள பிள்ளையாா், மாரியம்மன், காளியம்மன் கோயில்களுக்குச் சொந்தமான சுமாா் 14.35 ஏக்கா் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த நிலங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28-ஆம் தேதி கோயில் அறங்காவலா், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் முன்னிலையில் ஏலம் நடத்தப்பட்டது.

இந்த ஏலத்தை எடுத்த தங்கவேல், சீமைக் கருவேல மரங்களை வெட்டுவதற்குப் பதிலாக, கோயில் நிலத்திலிருந்த தேக்கு உள்ளிட்ட விலைமதிப்புள்ள மரங்களை சட்ட விரோதமாக வெட்டி வாகனங்களில் ஏற்றி கடத்த முயன்றாா். இந்த நிலையில், ஊா் பொதுமக்கள் அந்த வாகனத்தை சிறை பிடித்து வெட்டிய மரங்களைப் பறிமுதல் செய்தனா்.

இதைத் தொடா்ந்து, தங்கவேல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு புகாா் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டது குறித்து உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவா் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக சம்பந்தப்பட்ட அலுவலா்கள் 4 வாரங்களில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.