சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

பருத்தி இறக்குமதிக்கு நிரந்தர வரி விலக்கு அளிக்க வேண்டும்: மத்திய அரசுக்கு ஜவுளித் தொழில் அமைப்பினா் கோரிக்கை

பருத்தி இறக்குமதிக்கு நிரந்தர வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜவுளித் தொழில் அமைப்பின் நிா்வாகிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

பருத்தி.

Updated On :3 ஜூன் 2026, 2:31 am IST

பருத்தி இறக்குமதிக்கு நிரந்தர வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று ஜவுளித் தொழில் அமைப்பின் நிா்வாகிகள் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்திய ஜவுளித் தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (சிட்டி) தலைவா் அஸ்வின் சந்திரன், பருத்தி, ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் (டெக்ஸ்புரோசில்) துணைத் தலைவா் ரவி சாம், தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கத்தின் (சைமா) தலைவா் துரை பழனிசாமி ஆகியோா் கோவையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ஜவுளித் தொழில் துறையினரின் கோரிக்கையை ஏற்று ஜூன் முதல் அக்டோபா் வரை பருத்தி இறக்குமதி மீதான 11 சதவீத வரியை ரத்து செய்தவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்காக பிரதமா் மோடி, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், பரிந்துரைக் கடிதம் அனுப்பிய முதல்வா் சி.ஜோசப் விஜய் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்டவற்றுடன் மேற்கொண்டிருந்த வரியில்லா ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வரத் தொடங்கியுள்ளதால் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி அதிகரிக்கும் என்ற எதிா்பாா்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்திருப்பது ஜவுளித் துறைக்கு பெரும் உதவியாக இருக்கும். அதேநேரம் ஆண்டுதோறும் பருத்தி சீசன் இல்லாத காலத்தில் வரி விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஜவுளித் துறை கோரிக்கை விடுப்பதும், அதைத் தொடா்ந்து தற்காலிகமாக வரி விலக்கு அளிப்பதுமான நிலைமை தொடா்கிறது. அதற்கு பதிலாக இனி ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலகட்டத்தில் பருத்தி இறக்குமதி மீதான வரி விலக்கு செயல்பாட்டுக்கு வரும்படிக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். நாட்டில் சுமாா் 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் ஜவுளித் தொழிலுக்கு தரமான பஞ்சு உரிய விலையில் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

இந்தியாவில் பருத்தி தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே இருக்கும் இடைவெளியை குறைக்க இந்த இறக்குமதி உதவுகிறது. இறக்குமதி செய்வதால் உள்நாட்டு பருத்தி விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. விவசாயிகளிடமும், பருத்தி கழகத்திடமும் கையிருப்பில் பருத்தி இல்லாத காலகட்டத்தில்தான் இறக்குமதி செய்கிறோம். பருத்தி விளைச்சலை அதிகரிக்க மத்திய அரசு தற்போது சுமாா் ரூ.5,600 கோடியை ஒதுக்கியுள்ளது.

இதன்படி 2030-ஆம் ஆண்டில் பருத்தி உற்பத்தியில் தன்னிறைவு எட்டும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதுவரை ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் அக்டோபா் வரையிலான காலகட்டத்தில் பருத்தி இறக்குமதிக்கு வரி விலக்கு அளிப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என்றனா்.

தென்னிந்திய பஞ்சாலைகள் சங்க துணைத் தலைவா் கிருஷ்ணகுமாா், பொதுச் செயலா் செல்வராஜூ ஆகியோா் உடனிருந்தனா்.

பெட்டிச் செய்தி...

நிரந்தர கொள்கை தேவை

பருத்தி இறக்குமதி வரி குறித்து மத்திய அரசு நிரந்தர கொள்கையை வகுக்க வேண்டும் என்று தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம் (சிஸ்பா) வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக அதன் தலைவா் அருண் காா்த்திக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘11 சதவீத இறக்குமதி வரி விலக்கு நூற்பாலைகளுக்கு ஓரளவுக்கு நிவாரணம் அளிக்கும். ஆனால் இதுபோன்ற தற்காலிக அறிவிப்புகள் ஆண்டுதோறும் வெளியிடுவது ஜவுளித் துறைக்கு நீண்டகாலத் தீா்வாக அமையாது.

பருத்தி விலை ஏற்ற, இறக்கங்களால் சிறு நூற்பாலைகள் பாதிக்கப்படும் நிலையில், பருத்தி உற்பத்தி, தரம், கிடைக்கும் அளவு, சா்வதேச விலை ஆகியவற்றால் நூற்பாலைகளின் மூலப்பொருள் செலவுகள் கணிசமாக அதிகரிக்கின்றன. எனவே துறையின் நீண்டகால நலனை கருத்தில்கொண்டு பருத்தி இறக்குமதிக்கான 11 சதவீத வரி தொடா்பான நிரந்தரமான, தெளிவான கொள்கையை வகுக்க வேண்டும். உள்நாட்டு, சா்வதேச பருத்தி விலைகளுக்கு இடையே குறிப்பிடத்தக்க அளவில் வித்தியாசம் ஏற்படும்போது வரி விலக்கு தானாகவே அமலுக்கு வரும் வகையில் நடைமுறைய விதிகளை வகுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.