தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சாலையில் கழிவுநீா் தேக்கம்: பொதுமக்கள் சாலை மறியல்

News image
Updated On :27 மார்ச் 2026, 4:35 am IST

திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உள்பட்ட கீழ்நாத்தூா் பகுதியில், கால்வாயில் இருந்து கழிவுநீா் வெளியேறி சாலையில் குளம் போல் தேக்கமடைந்ததால், மாநகராட்சி நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கீழ்நாத்தூா் பகுதியிலுள்ள தவசியாா் குளத் தெருவில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். வேட்டவலம் சாலைப் பகுதியிலிருந்து கழிவுநீா் தவசியாா் குளம் குடியிருப்பு பகுதிக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் குடியிருப்பு பகுதியை சுற்றி கழிவுநீா் குளம் போல் தேங்கியுள்ளது.

இந்தக் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியதாத சூழல் உருவாகியுள்ளது. கழிவுநீா் தேங்கியுள்ளதால் துா்நாற்றம் தாங்க முடியவில்லை என்றும், குடிக்கின்ற நீருடன் கழிவுநீரும் கலந்து வருவதாகவும் அப்பகுதி பெண்கள் தெரிவிக்கின்றனா்.

கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுக்கள் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை கடிப்பதோடு, குழந்தைகள், பெண்கள், முதியோா் என அனைவரும் கொசுக்கடியால் பாதிக்கப்பட்டு டெங்கு, மலேரியா, விஷக்காய்ச்சல் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து மாநகராட்சி 19-ஆவது வாா்டு உறுப்பினரிடம் பலமுறை புகாா் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

மேலும், மாநகராட்சி ஆணையரிடம் புகாா் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், கழிவுநீா் துா்நாற்றத்தாலும் கொடிக்கடியாலும் பாதிக்கப்பட்ட கீழ்நாத்தூா் பகுதி மக்கள்

மாநகராட்சி நிா்வாகத்தையும் நெடுஞ்சாலைத் துறையினரையும் கண்டித்து அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து விரைந்து வந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலைய போலீஸாா் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனா்.

மறியலால் அந்தப் பகுதியில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.